செல்போன் ஆப்களால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து! - ட்ராய்
டெல்லி: நாட்டின் பாதுகாப்புக்கு செல்போன் அப்ளிகேஷன்களால் அதிக பாதிப்பு ஏற்படும் என்று மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ட்ராய் தெரிவித்துள்ளது.
'நெட் நியூட்ரியாலிட்டி' எனப்படும் இணையதள சமவாய்ப்பு முறை தொடர்பான விதிகள், கூகுள் டாக், ஸ்கைப், வாட்ஸ் அஃப், வைபர் போன்ற பிரபல செல்பேசி பயனுருக்கள் (ஆப்ஸ்) தொடர்பான நெறிமுறைகளை உருவாக்குவது குறித்து, பல்வேறு தரப்பினரின் கருத்துகளை அறிவதற்காக அரசு வலைப் பக்கத்தில் "டிராய்' அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
செல்பேசியை அடிப்படையாகக் கொண்ட பயனுருக்களில், இணையதளம் மூலம் தொலைபேசி அழைப்பு மேற்கொள்ளவும், குறுந்தகவல் அனுப்பவும் வசதி உள்ளது. உபேர், ஒலா போன்ற தனியார் வாகனங்களின் பயனுருக்கள், இணையவழி வர்த்தகம் தொடர்பான பயனுருக்கள் ஆகியவை உள்ளூரில் பின்பற்றப்படும் விதிகள், உரிமங்கள் அளிக்கும் முறைக்கு கட்டுப்படாததாகவும், எதிரானதாகவும் உள்ளன.
பெரும்பாலான பயனுருக்கள், அதை பயன்படுத்துவோரின் இருப்பிடங்களை மிக எளிதாகக் கண்டறியும் வசதியை கொண்டவையாக உள்ளன. இதுபோன்ற தகவல், குற்றங்கள் புரியவும், குற்றங்களில் ஈடுபடுவதற்குரிய இலக்காகவும் பயன்படுத்த வாய்ப்புள்ளது.
இந்த அச்சுறுத்தல்களால், நாட்டின் பாதுகாப்புக்கும், தனிநபரின் பாதுகாப்புக்கும் பாதிப்பு ஏற்படும்," என அந்த அறிவிப்பில் டிராய் தெரிவித்துள்ளது.
டிராயின் அறிவிப்பு, பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளை தெரிவிக்க வசதியாக, வரும் 24ஆம் தேதி வரையிலும், அதற்கு பதில் அளிக்கும் வகையில் அடுத்த மாதம் 8ஆம் தேதி வரையிலும் வலைப்பக்கத்தில் இடம்பெற்றிருக்கும்.












Click it and Unblock the Notifications