நேதாஜி விமான விபத்தில் உயிரிழக்கவில்லை... 1964ஆம் ஆண்டு வரை உயிருடன் இருந்தார்?
கொல்கத்தா: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1945-ல் விமான விபத்தில் உயிரிழக்கவில்லை; 1964ஆம் ஆண்டு வரை உயிருடன் இருந்திருப்பதற்கான சாத்தியங்களை மேற்கு வங்க அரசு பகிரங்கப்படுத்தியுள்ள ஆவணங்கள் உறுதி செய்வதாக கூறப்படுகிறது.
நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் தொடர்பான ஆவணங்களை வெளியிட மத்திய அரசு தயக்கம் காட்டி வந்தது. ஆனால் தடாலடியாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி இன்று நேதாஜி தொடர்பான 12,744 பக்கங்களைக் கொண்ட 64 ஆவணங்களை பொதுமக்களின் பார்வைக்கு பகிரங்கப்படுத்தி இருக்கிறார்.

கொல்கத்தா போலீஸ் கமிஷன்ர் சுராஜித் கர் இன்று செய்தியாளர்களை சந்தித்து, போலீஸ் மியூசியத்தில் பொதுமக்களின் பார்வைக்காக நேதாஜி தொடர்பான ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த ஆவணங்களின் சிடி, நேதாஜியின் குடும்பத்தினருக்கும் அளிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க அரசு இன்று பகிரங்கப்படுத்தியிருக்கும் ஆவணங்களின் அடிப்படையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1964ஆம் ஆண்டு வரை உயிருடன் இருந்துள்ளார் என நம்பப்படுகிறது.
1945ஆம் ஆண்டு தைவான் விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை; அதன் பின்னர் 19 ஆண்டுகள் கழித்து 1964ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவர் ரஷ்யாவில் இருந்து சீனா வழியாக இந்தியாவுக்கு திரும்பியதாக 1960ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட அமெரிக்காவின் உளவு அமைப்பு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இதனால் நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் 1964ஆம் ஆண்டு வரை உயிருடன் இருந்ததாக நம்பப்படுகிறது. அதேபோல் 1941ஆம் ஆண்டு ஜனவரி 16-ந் தேதி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த நேதாஜி சீக்கியர் வேடத்தில் அந்த காவலில் இருந்து தப்பியதாகவும் சில ஆவணங்களில் கூறப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications