கிரிமினல் வழக்குகளை மறைத்து தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி செல்லாது: உச்ச நீதிமன்றம் அதிரடி
டெல்லி: கிரிமினல் குற்ற வழக்கு பின்னணி உள்ளவர்கள் அதை மறைத்து தேர்தலில் போட்டியிட்டால் அவர்கள் வெற்றி பெற்றாலும் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர்கள் தங்களுடைய எம்.பி., எம். எல்.ஏ. பதவிக்கான தகுதியை தாமாகவே இழந்துவிடுவார்கள் என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு அளித்திருந்தது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் கிருஷ்ணமூர்த்தி, 2006ம் ஆண்டு தேக்கம்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கான தேர்தலின்போது வேட்பு மனுத் தாக்கலில் தன் மீதுள்ள கிரிமினல் குற்ற வழக்குகள் விவரத்தை தெரிவிக்கவில்லை.

அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், வழக்குகள் விவரத்தை தெரிவிக்காததால் கிருஷ்ணமூர்த்தியின் தேர்வு ரத்தாவதாக சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பி.சி. பந்த் ஆகியோர் தங்களுடைய தீர்ப்பில் கூறியதாவது:
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, தேர்தல்களில் போட்டியிடுவோர் தங்கள் மீதுள்ள கிரிமினல் குற்ற வழக்கு விவரங்களை வேட்பு மனுவில் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்காமல் தகவல் மறைக்கப்படுவது, தெரிவிக்காமல் இருப்பது வாக்காளர்களை ஏமாற்றுவதாகும். வேட்பாளர் குறித்த முழு தகவல்களும் வாக்காளர்களுக்கு தெரிய வேண்டும். இது அவர்களுடைய உரிமையாகும்.
அவ்வாறு மறைக்கப்படும் அல்லது தெரிவிக்காத தகவல்கள், வாக்காளரின் உரிமையில் குறுக்கிடுவதும், செல்வாக்கை செலுத்துவதாகவே கருதப்படும். எந்த ஒரு மக்கள் பிரதிநிதியும், தங்கள் மீது நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகள் தொடர்பான விவரங்களை வேட்பு மனுக்களின்போதே தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்காவிட்டால் அவர்கள் அந்தப் பதவிக்கான தகுதியை இழந்துவிடுவார்கள். இது தேர்தலில் போட்டியிடும் அனைவருக் கும் பொருந்தும்.
இங்கு விசாரிக்கப்படும் வழக்கில், கிருஷ்ணமூர்த்தி தன் மீதான கிரிமினல் வழக்கு தொடர்பான விவரங்களை மறைத்துள்ளார். அதன்படியே அவருடைய தேர்தல் செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. வேட்பு மனுவின்போது இந்த தகவல்களை தெரிவிக்க வேண்டும் என்பது தெரிந்தும் அதை மறைத்துள்ளார். அதனால் அவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, கிருஷ்ணமூர்த்தி யின் தேர்தல் ரத்து செய்யப்படுகிறது. அவர் அந்தப் பதவிக்கான தகுதியை இழந்துவிட்டார். இவ்வாறு தங்களுடைய தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications