ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்த மத்திய அரசின் அறிவிக்கைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது தமிழகத்தில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளைகள் துன்புறுத்தப்படுவதாகவும், இதனால் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடை விதித்தது. இதனால் கடந்த ஆண்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.

New bench of SC judges to hear appeals against Govt nod to Jallikattu

இந்த ஆண்டில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி மத்திய அரசை தமிழக அரசு வற்புறுத்தியது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து, இந்த ஆண்டில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் மாட்டு வண்டி போட்டிகளை நடத்த மத்திய அரசு கடந்த 8ம் தேதி அனுமதி வழங்கியது.

மத்திய அரசு அனுமதி

"காட்சிப்படுத்தப்படும் விலங்குகள்" பட்டியலில் உள்ள காளையை நிபந்தனையுடன் ஜல்லிக்கட்டு போட்டியில் ஈடுபடுத்த வகை செய்யும் அரசாணையை மத்திய அரசு கடந்த 8ஆம் தேதி வெளியிட்டது. இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட இடங்களிலும், திண்டுக்கல் உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

ஜல்லிக்கட்டுக்கு தயாரான மதுரை

இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட இடங்களிலும், திண்டுக்கல் உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு

இதற்கிடையே, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கி மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கை, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மீறும் வகையில் இருப்பதாக விலங்குகள் நல அமைப்புகள் குற்றம்சாட்டி உள்ளன. விலங்குகள் நல ஆர்வலர்களும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

13 மனுக்கள் தாக்கல்

இந்த நிலையில், ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் மாட்டு வண்டி பந்தயம் நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய விலங்குகள் நல வாரியம், இந்திய விலங்குகள் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட 4 அமைப்புகள் சார்பிலும், 9 தனி நபர்கள் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக மொத்தம் 13 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

உச்சநீதிமன்ற தீர்ப்பு அவமதிப்பு

அந்த மனுக்களில், தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் பிற மாநிலங்களில் மாட்டு வண்டி பந்தயம் நடத்த அனுமதித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டு உள்ளது. மேலும் இவற்றில் இரு மனுக்கள் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான மனுக்கள் ஆகும். அதாவது, மத்திய அரசின் அறிவிக்கை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கும் வகையில் உள்ளதாக அவற்றில் கூறப்பட்டு உள்ளது.

வழக்கறிஞர்கள் வாதம்

தலைமை நீதிபதி சி.எஸ்.தாகூர் மற்றும் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மனுதாரர்கள் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கே.கே.வேணுகோபால், அரிமா சுந்தரம், ஆனந்த் குரோவர் மற்றும் சித்தார்த் லுத்ரா ஆகியோர் ஆஜராகி வாதாடினர். அப்போது, மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கை, உச்ச நீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டு மே 7ம் தேதி வழங்கிய தீர்ப்பை முற்றிலும் அலட்சியப்படுத்துவதாக உள்ளது.

காளைகளுக்கு ஆபத்து

ஜல்லிக்கட்டு மற்றும் மாட்டு வண்டி பந்தயம் ஆகியவை பாரம்பரியமான விளையாட்டுகள் என்றும், இந்த விளையாட்டில் கலந்து கொள்ளும் காளைகள் எந்த வகையிலும் கொடுமைப்படுத்தக்கூடாது என்றும் அந்த அறிவிக்கையில் கூறப்பட்டு உள்ளது. ஜல்லிக்கட்டு போன்ற போட்டிகளில் ஈடுபடுத்தப்படும் காளைகள் தானாகவே ஓடுவதற்கோ அல்லது பந்தயத்தில் கலந்துகொள்வதற்கோ ஏற்றவை அல்ல என்றும், அவை வலுக்கட்டாயமாக போட்டிகளில் ஈடுபடுத்தப்படும் போது மிகவும் சோர்வடைகின்றன என்றும் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தனது தீர்ப்பில் கூறி உள்ளது.

காளைகளுக்கு எதிரானது

இதுபோன்ற போட்டிகள் காளைகளின் நலனுக்கு எதிரானது என்றும் கூறி இருக்கிறது. ஜல்லிக்கட்டு போட்டி சட்டத்துக்கு எதிரானது. இந்த போட்டி மிருகவதை தடை சட்டத்தை மீறும் வகையில் நடத்தப்படுகிறது. உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, அறிவிக்கை மூலம் மத்திய அரசு மீறுவது சட்டவிரோதமானது. எனவே, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போட்டிகளுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும். மத்திய அரசின் அறிவிக்கையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கூறினர். வாதங்களை கேட்ட நீதிபதிகள், மனுக்கள் மீது இன்று 11ம் தேதி விசாரிக்கப்படும் என்று உத்தரவு பிறப்பித்தனர்.

வேறு அமர்வுக்கு மாற்றம்

அதன்படி, இந்த மனுக்கள் தலைமை நீதிபதி சி.எஸ்.தாக்குர், நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று காலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர் நீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு வழக்கை நீதிபதி பானுமதி ஏற்கனவே விசாரித்ததால் இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றம் செய்த தலைமை நீதிபதி, வழக்கை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, என்.வி.ரமணா அடங்கிய அமர்வு விசாரிக்கும் என்று உத்தரவிட்டார்.

விலங்குகள் நலவாரியம் எதிர்ப்பு

இதைத் தொடர்ந்து நண்பகலில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போாது, விலங்குகள் நல வாரியம் சார்பில் வழக்கறிஞர் அரிமா சுந்தரம் வாதிடுகையில், ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து ஏற்கனவே உள்ள அறிவிக்கையை மீற முடியாது என்றும், புதிய அறிவிக்கையில் ஜல்லிக்கட்டு அனுமதிக்காக புதிய அம்சத்தை சேர்த்தது சரியல்ல என்றும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து வாதிட்ட அட்டர்னி ஜெனரல், புதிய அறிவிக்கையில் காளை வதை தொடர்பாக கவனத்தில் கொண்டுள்ளோம் என்று தெரிவித்தார்.

இடைக்கால தடை

விலங்குகள் நல வாரியத்தின் வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு , ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி அளித்து மத்திய அரசு பிறப்பித்த அறிவிக்கைக்கு இடைக்கால தடை விதித்ததோடு, மத்திய, மாநில அரசு உள்ளிட்ட தரப்புகள் 4 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தது.

அதிர்ச்சியில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள்

மதுரை மாவட்டம், பாலமேடு, அலங்காநல்லூர், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் கனஜோராக நடந்து வருகின்றன. இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த ஆண்டு பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு நடக்குமா நடக்காதா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+