மத்திய அரசு பள்ளிகளில் யோகா பாடம் கட்டாயம் இல்லை: அமைச்சர் ஸ்மிருதி இரானி
டெல்லி: மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை யோகா ஒரு பாடமாக அறிமுகப்படுத்தப்படும். ஆனால் அது கட்டாயப் பாடம் இல்லை என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
யோகா ஆசிரியர்களின் 2 நாள் தேசிய மாநாடு டெல்லியில் திங்கட்கிழமை துவங்கியது. அந்த மாநாட்டில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கலந்து கொண்டு யோகா பாடத்திட்டம் மற்றும் பாடப் புத்தகங்களை அறிமுகப்படுத்தினார்.
அப்போது அவர் பேசுகையில்,
மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை யோகா ஒரு பாடமாக அறிமுகப்படுத்தப்படும். ஏற்கனவே கணக்கு, அறிவியல் என்று பல பாடங்கள் இருக்கையில் புதிதாக யோகா வேறா என்று மாணவர்கள் அஞ்சுவது எனக்கு புரிகிறது. யோகாவில் செய்முறைக்கு 80
சதவீத மதிப்பெண்கள் வழங்கப்படும் என்பதை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் செய்முறையை முழுமனதுடன் செய்வோம் என்ற வாக்குறுதியை மாணவ, மாணவியர் அளிக்க வேண்டும். டெல்லியில் தேசிய அளவிலான யோகா போட்டி நடத்த என் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. வெற்றியாளருக்கு ரூ.5 லட்சம் ரொக்கம் பரிசாக அளிக்கப்படும் என்றார்.
ஸ்மிருதியின் பேச்சை அடுத்து ஊடகங்களில், மத்திய அரசு பள்ளிகளில் யோகா பாடம் கட்டாயம் என்று செய்தி வெளியாகின. இதை பார்த்த அவர் கூறுகையில், யோகா பாடம் கட்டாயப்பாடம் இல்லை. பிற உடற்கல்வி படிப்பில் யோகாவும் சேர்க்கப்படும் என்றார்.