”ஜி.அய்யப்பன்”- இஸ்ரோ ஜி.எஸ்.எல்.வி மார்க்-3யின் புதிய திட்ட இயக்குனர் இவர்தான்!
திருவனந்தபுரம்: இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 திட்ட இயக்குனராக மூத்த விஞ்ஞானி அய்யப்பன் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
இஸ்ரோ என்னும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் மூத்த விஞ்ஞானிகளில் ஒருவர் ஜி.அய்யப்பன்.
இவர் திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் திட்டத்தின் திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டார். நேற்று அவர் தனது புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 ராக்கெட் 4 ஆயிரத்து 500 கிலோ முதல் 5 ஆயிரம் கிலோ வரையிலான எடை கொண்ட இன்சாட்-4 வகை தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் திறன் வாய்ந்தது ஆகும்.
அய்யப்பன் திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டமும் சென்னை ஐ.ஐ.டியில் எம்.டெக் பட்டமும் பெற்றவர் ஆவார். 1982 ஆம் ஆண்டு முதல் இஸ்ரோவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.