சுட்டுத் தள்ளிட்டு போய்ட்டே இருக்கக் கூடாது.. போலீஸுக்கு சுப்ரீம் கோர்ட் கிடுக்கிப்பிடி!
டெல்லி: போலீஸ் என்கவுண்டர்களுக்கு உச்சநீதிமன்றம் ஒரு புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. இனிமேல் போலீஸார் என்கவுண்டர் சம்பவங்களை நிகழ்த்தும்போது அதை முறையாக பதிவு செய்ய வேண்டும் என்பதே அது.
என்கவுண்டருக்கான அவசியம் நேரிடும்போது அதை முறையாக பதிவு செய்ய வேண்டும். எழுத்துப் பூர்வமாகவோ அல்லது வீடியோ ஆதாரமாகவோ அதை பதிவு செய்ய வேண்டும். இதுதொடர்பாக முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து அதில் இந்த ஆதாரங்களையும் இணைக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சட்டவிரோதமான போலீஸ் என்கவுண்டர்களை அதாவது போலி என்கவுண்டர்களைத் தடுக்கும் வகையில் இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

ஆவணப்படுத்துக
தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான பெஞ்ச் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக பெஞ்ச் பிறப்பித்துள்ள உத்தரவில், எழுத்து அல்லது மின்னணு மூலமாக இந்த என்கவுண்டர் சம்பவங்களை போலீஸார் ஆவணப்படுத்த வேண்டும்.

தகவல்களைப் பதிவு செய்க
தீவிரவாதிகள் குறித்த புலனாய்வுத் தகவல்கள் கிடைக்கும்போது அதை முறைப்படி பதிவு செய்ய வேண்டும்.

மரணம் சம்பவித்தால் எப்ஐஆர் போடுக
ஒரு போலீஸ் என்கவுண்டர் மரணத்தில் முடியும்போது, அதுதொடர்பாக உடனடியாக முதல் தகவல் அறிக்கை அல்லது போலீஸ் புகார் பதிவு செய்யப்பட வேண்டும்.்

ரகசியம் காக்கப்பட வேண்டும்
மேலும் இதுதொடர்பாக துப்பு கொடுத்தோர் குறித்த விவரம் ரகசியமாக வைக்கப்பட வேண்டும். உடனடியாக மாவட்ட நீதிபதியின் விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும்.

ஆயுதங்களை தடயவியல் சோதனைக்கு அனுப்புக
மேலும் என்கவுண்டரின்போது பயன்டுத்தப்பட்ட துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை உடனடியாக தடயவியல் சோதனைக்கு ஒப்படைக்க வேண்டும்.

யார் விசாரிக்க வேண்டும்
போலீஸ் என்கவுண்டர்களை மாநில குற்றப் புலனாய்வுத்துறை அல்லது வேறு பகுதி போலீஸ் அதிகாரிகள் கொண்ட குழுதான் விசாரிக்க வேண்டும். என்கவுண்டரில் ஈடுபட்ட போலீஸார் அல்லது அவர்கள் சார்ந்த பகுதி போலீஸ் அதிகாரிகள் இந்தக் குழுவில் இடம் பெறக் கூடாது.

மனித உரிமை ஆணையத்திற்குத் தகவல் தருக
என்கவுண்டர் குறித்த தகவல்களை உடனடியாக தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் அதுதொடர்பான விசாரணை நிலவர அறிக்கையையும் ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும்.

முடிந்த கையோடு விருது, பதவி உயர்வு கூடாது
என்கவுண்டர் முடிந்த கையோடு அதில் ஈடுபட்டோருக்குப் பதவி உயர்வு வழங்குவது, விருது வழங்கிக் கெளரவிப்பது ஆகியவை கூடவே கூடாது. ஒரு போலீஸ்காரரின் திறமையை என்கவுண்டரில் ஒருவரை வீழ்த்துவதை அடிப்படையாக வைத்து நிர்ணயிக்கக் கூடாது என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தூக்கில் போட வேண்டும்
கடந்த 2011ம் ஆண்டு ஒரு வழக்கின்போது உச்சநீதிமன்றம் கூறுகையில், போலி என்கவுண்டர் சம்பவங்களைச் செய்த போலீஸாருக்குத் தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும். சட்டத்தைக் காப்பவர்கள் போலீஸார். ஆனால் அவர்களே கூலிப்படையினர் போல செயல்படுவது கடுமையாக கண்டிக்கத்தக்கது. குரூரமான கொலையாளிகளாக போலீஸார் மாறுவதை அனுமதிக்கக் கூடாது என்று கடுமையாக கண்டித்திருந்தது என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications