இந்தியாவின் அடுத்த ஜனாதிபதி யார்?... ஜெர்மனி செல்லும் முன் மோடி நடத்திய முக்கிய டிஸ்கஷன்!
இந்தியாவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து ஜெர்மனி செல்வதற்கு பிரதமர் மோடியுடன் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
டெல்லி: இந்தியாவின் அடுத்த ஜனாதிபதி யார் என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
ஜனாதிபதியாக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வரும் ஜூலை 14-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் அடுத்த ஜனாதிபதிக்கான வேட்பாளர் குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறது.
பாஜகவும், காங்கிரஸும் தங்கள் கட்சியை சேர்ந்த ஒருவரே ஜனாதிபதி மாளிகையை அலங்கரிக்க வேண்டும் என்பதில் போட்டி போட்டு வருகின்றனர். இரு தரப்பினரும் தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர் அனைத்து கட்சியாலும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக உள்ளனர்.
ஜோஷியின் பெயர்
ஜனாதிபதி தேர்தல் வரும் ஜூலை 25-ஆம் தேதி நடைபெறும் நிலையில் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து டெல்லியில் பாஜக தலைவர்களுடன் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியின் பெயரே அடிப்பட்டது.
வயது வரம்பு
75 வயதுக்கு மேற்பட்டவர்கள் அமைச்சர், முதல்வர் உள்ளிட்ட பொறுப்புகளில் நீடிக்கக் கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி சட்டம் கொண்டு வந்தார். இதையேற்று குஜராத் முதல்வராக இருந்த ஆனந்தி பென், சிறுபான்மைத் துறை அமைச்சராக இருந்த நஜ்மா ஹெப்துல்லா ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
ஜனாதிபதி தேர்தலிலும்....
எனவே மோடியை பொருத்தமட்டில் இந்த வயது வரம்பை ஜனாதிபதி தேர்தலிலும் புகுத்த முடிவு செய்துள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் சாய்ஸ் முரளி மனோகர் ஜோஷியாக உள்ளார். அத்வானியின் பெயரும் அடிப்பட்டாலும் வயது வரம்பை பின்பற்றும்போது அத்வானியை விட ஜோஷி இளையவர் என்பதால் மோடியின் தேர்வும் ஜோஷியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பாபர் மசூதி இடிப்பு
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. லக்னோ நீதிமன்றத்தால் அவர்கள் இருவரும் தண்டனை பெறவில்லை என்றாலும் வழக்கில் விசாரணை நடத்தப்பட்டவர்கள் ஜனாதிபதி தேர்தலில் நிற்கக் கூடாது என்ற சட்டம் இல்லாத போதிலும் பெரும்பாலான பாஜகவினரின் விருப்பம் அத்வானியோ அல்லது ஜோஷியோ இல்லை.
யார் அந்த வேட்பாளர்?
அப்படி இருக்கையில் பிரதமர் ஜெர்மனி செல்வதற்கு முன்னர் அவரிடம் நடத்தப்பட்ட ஆலோசனையில் ஜனாதிபதி வேட்பாளராக ஜார்க்கண்ட் ஆளுநர் திரௌபதி முர்மு ஆகும். இந்த கருத்தையே பிரதமருக்கு நெருக்கமானவர்களும் விரும்புகின்றனர். மேலும் மத்திய சமூகநீதி மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சராக உள்ள தருண் சந்த் கெலாட்டின் பெயரும் அடிப்பட்டு வருகிறது.