நாடு முழுவதும் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் 9 பேர் அதிரடி கைது!
டெல்லி: நாடு முழுவதும் அதிரடியாக ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் 9 பேரை தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைப் போன்று ஜனூத்-உல்-கலிபா-இ-ஹிந்த் என்ற புதிய பயங்கரவாத அமைப்பு உருவாக்கப்பட்டு வருவதாக தேசிய புலனாய்வு ஏஜென்சிக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து கர்நாடகம், தெலுங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரம், உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் போலீசார், மத்திய பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த நடவடிக்கையின் போது னூத்-உல்-கலிபா-இ-ஹிந்த் அமைப்பின் தலைவர் ஷேக் உள்பட 14 பேர் பிடிபட்டனர். இவர்கள் அனைவரும், கூடுதல் விசாரணைக்காக டெல்லிக்கு கொண்டு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், நன்கு திட்டமிட்டு ஜனூத்-உல்-கலிபா-இ-ஹிந்த் அமைப்பு உருவாக்கப்படுவது தெரியவந்துள்ளது.
பிடிபட்ட அனைவரும் 18 முதல் 30 வயது வரையுடையவர்கள்; இவர்களில் சிலர் சாப்ட்வேர் என்ஜினியர்கள். ஹவாலா முறை மூலம் இவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி அனுப்பப்பட்டு வந்தது.
மேலும் இவர்கள் அனைவரும் இந்தியன் முஜாஹீதீன் அமைப்பைச் சேர்ந்த சபி ஆர்மருடன் தொடர்பில் இருந்து வந்தனர் என்றும், சபி ஆர்மர் தற்போது எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை என்றும் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது பிடிபட்ட 19 பேரில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.