சென்னை சென்ட்ரல், பர்தமான் குண்டுவெடிப்புகளுக்கு இடையே தொடர்பு: என்.ஐ.ஏ. சந்தேகம்
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் பர்தமான் நகரில் நடந்த குண்டுவெடிப்புக்கும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்புக்கும் இடையே தொடர்பு இருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்பு சந்தேகிக்கிறது.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பர்தமான் நகரில் கடந்த 2ம் தேதி நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் பற்றி தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் மூத்த திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் ஒருவரின் ஆதரவில் கொல்கத்தாவில் செயல்படும் பார்க் சர்கஸ் மருத்து வமனையில் 3 பேரை பர்தமான் போலீசார் யாருக்கும் தெரியாமல் கடந்த 6ம் தேதி அனுமதித்துள்ளனர். குண்டுவெடிப்பின்போது ஏற்பட்ட காயத்திற்காக அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அந்த 3 பேரிடம் தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணான பதில்கள் அளித்தனர். தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கொல்கத்தாவின் பர்தமான் நகரில் விசாரணை நடத்திய வேளையில் மற்றொரு குழு சென்னையில் ஐஎஸ்ஐ உறுப்பினர் ஒருவரிடம் விசாரணை நடத்தியது.
பர்தமான் மற்றும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பங்களில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளில் ஒற்றுமை உள்ளது தெரிய வந்துள்ளது. பர்தமான் மற்றும் சென்னை குண்டுவெடிப்புகளுக்கு இடையே சம்பந்தம் உள்ளது என தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
பர்தமான் குண்டுவெடிப்பில் காயம் அடைந்த அப்துல் ஹகிம் என்பவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளபோது அந்த 3 பேரை மட்டும் போலீசார் எதற்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் என்று புலனாய்வு அமைப்பினர் வியக்கின்றனர். காயம் அடைந்த 3 பேரோ தாங்கள் அக்டோபர் 5ம் தேதி நடந்த மால்டா குண்டுவெடிப்பில் காயம் அடைந்ததாக தெரிவித்துள்ளனர்.
மால்டா எஸ்.பி. பிரசுன் பானர்ஜியிடம் கேட்டால் தங்கள் பகுதியில் நடந்த குண்டுவெடிப்பில் காயமடைந்த 3 பேர் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவித்தார். ஆனால் அவருக்கு மருத்துவமனையின் பெயர் தெரியவில்லை.