அப்பா, எனக்கு ராணுவ உடை தான் பிடிச்சிருக்கு: தந்தையிடம் தெரிவித்த வீரர் நிரஞ்சன்
பெங்களூர்: என் மகனுக்கு பிடித்த உடை ராணுவ உடை தான் என பதன்கோட் விமானப்படை தளத்தில் வெடிகுண்டை செயல் இழக்கச் செய்கையில் பலியான லெப்டினன்ட் கர்னல் நிரஞ்சனின் தந்தை தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளத்திற்குள் புகுந்த 5 தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 6 பேர் பலியாகினர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் 5 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஞாயிற்றுக்கிழமை விமானப்படை தளத்தில் இருந்த வெடிகுண்டை செயல் இழக்கச் செய்கையில் வெடிகுண்டு நிபுணரான தேசிய பாதுகாப்பு படை வீரர் லெப்டினன்ட் கர்னல் நிரஞ்சன் குண்டு வெடித்து பலியானார்.
நிரஞ்சன்
கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த நிரஞ்சனின் குடும்பம் கர்நாடக மாநிலம் பெங்களூரில் தான் பல ஆண்டுகளாக உள்ளது. 2004ம் ஆண்டு அவர் என்ஜினியர்கள் ரெஜிமென்ட்டில் சேர்ந்துள்ளார். அவருக்கும் டாக்டர் ராதிகாவுக்கம் திருமணமானது. அவர்களுக்கு 18 மாத மகள் உள்ளார். பெங்களூரில் பிறந்து வளர்ந்த அவருக்கு 2 சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி உள்ளார்.
ராணுவ உடை
சிறு வயதில் இருந்தே ராணுவத்தில் சேர வேண்டும் என்று என் மகன் ஆசைப்பட்டான். அப்பா, எனக்கு ராணுவ உடை தான் பிடித்துள்ளது என்று தன்னிடம் நிரஞ்சன் கூறியதாக அவரின் தந்தை சிவரஞ்சன் தெரிவித்துள்ளார்.
வெடிகுண்டு நிபுணர்
லெப்டினன்ட் கர்னல் நிரஞ்சன் வெடிகுண்டுகளை கையாள்வதில் நிபுணர் ஆவார். அவர் தான் வெடிகுண்டு நிபுணர் குழுவின் தலைவராக இருந்தார். அவர் வீரமானவர். அந்த வீரரை தலை வணங்குகிறேன் என்று தேசிய பாதுகாப்பு படை டைரக்டர் ஜெனரல் ஆர்.சி. தயால் கூறியுள்ளார்.
ஓனம்
கடந்த செப்டம்பர் மாதம் ஓனம் பண்டிகையின்போது நிரஞ்சன் கடைசியாக எங்கள் வீட்டிற்கு வந்தார். தனக்கு பதவி உயர்வு கிடைத்திருப்பதை அக்டோபர் மாதம் போன் செய்து கூறினார். அவர் மிகவும் சந்தோஷமாக இருந்தார். தனது மகளின் புகைப்படங்களை வாட்ஸ்ஆப்பில் எனக்கு அனுப்பி வைத்தார் என்று நிரஞ்சனின் மாமா ஹரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.