ஆபீஸ் வந்ததும் முகமெல்லாம் சிரிப்பு.. 2வது முறையாக நிதியமைச்சராக பொறுப்பு ஏற்றார் நிர்மலா சீதாராமன்
டெல்லி: தொடர்ந்து இரண்டாவது முறையாக நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் இன்று பொறுப்பேற்றார். பொறுப்பேற்க, நாடாளுமன்றத்தின் நார்த் பிளாக் அலுவலகத்திற்கு வந்த அவரை, நிதித்துறை செயலர் டி.வி.சோமநாதன் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரியும் அப்போது உடன் இருந்தார். சீதாராமன் தனது ஏழாவது பட்ஜெட்டையும், ஆறாவது முழு பட்ஜெட்டையும் தொடர்ச்சியாக தாக்கல் செய்யப்போகிரார். ஆம்.. 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட் 18வது மக்களவையில் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படும்.
நிர்மலா 2017இல் பாதுகாப்பு அமைச்சராக மோடியால் நியமிக்கப்பட்டார். இதன் மூலம், நாட்டின் முதல் பெண், பாதுகாப்புத்துறை அமைச்சர் என்ற பெருமையை பெற்றார். அதற்கு முன், அவர் தொழில் மற்றும் வர்த்தக அமைச்சராக பணியாற்றி வந்தார். அருண் ஜேட்லியின் உடல்நிலை சரியில்லாததைத் தொடர்ந்து, அவருக்கு 2019 இல் நிதி இலாகா முதல்முறையாக வழங்கப்பட்டது, இதன் மூலம் இந்தியாவின் முதல் முழுநேர பெண் நிதி அமைச்சர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

இவரின் நிதியமைச்சக பதவி காலத்தில் அடிப்படை கார்ப்பரேட் வரி 30% முதல் 22% வரை குறைக்கப்பட்டது. கோவிட் தொற்றுநோய் காலத்தில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 10%க்கு சமமான ரூ.20 லட்சம் கோடி பொருளாதாரப் பேக்கேஜை அவர் அறிவித்து கவனம் ஈர்த்தார். ஆனால் பலருக்கும் அதன் பலன் போய் சேரவில்லை என்ற விமர்சனத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
நிதிப்பற்றாக்குறை நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.8% ஆக இருக்கும் என்ற என முந்தைய மதிப்பீட்டில் இருந்து 5.6% ஆகக் குறைத்துள்ளார் நிர்மலா. பட்ஜெட் தாக்கல் செய்வதில் பிரீஃப்கேஸுக்குப் பதிலாக பையை அறிமுகம் செய்தார். பட்ஜெட் தாக்கல் தேதியை பிப்ரவரி கடைசி வேலை நாளிலிருந்து பிப்ரவரி 1 ஆம் தேதிக்கு மாற்றினார். அதெல்லாம் சரி.. ஆனால் தனி நபர் வருமான வரி விஷயத்தில் மாற்றம் தரவில்லை. தேதியையும், பையையும் மாற்றினால் போதுமா என்ற விமர்சனங்கள் சேர்ந்தே எழுந்தன.

மதுரையில் 1959 இல், ஆகஸ்ட் 18ல், நாராயண் சீதாராமன் மற்றும் சாவித்திரிக்கு மகளாகப் பிறந்த நிர்மலா சீதாராமன், திருச்சியில் உள்ள சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில் பொருளாதாரம் பயின்றார். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) முதுகலை மற்றும் M.Phil படித்தார். அரசியலுக்கு வருவதற்கு முன்பு, அவர் தனது கணவர் பரகலா பிரபாகருடன் இங்கிலாந்தில் வசித்து வந்தார், மேலும் கார்ப்பரேட் துறையில் பணியாற்றிய அனுபவமும் உண்டு.
சீதாராமன் 2008 இல்தான் பாஜகவில் சேர்ந்தார். சுஷ்மா ஸ்வராஜுக்குப் பிறகு கட்சியின் இரண்டாவது பெண் செய்தித் தொடர்பாளராக ஆனார். அவர் தொலைக்காட்சி விவாதங்களில் பரிச்சயமான முகமாக மாறத் தொடங்கினார். ஹைதராபாத்தில் உள்ள பொதுக் கொள்கை ஆய்வு மையத்தின் துணை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். 2003 முதல் 2005 வரை, அவர் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக இருந்தார். ஆனால் இவர் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டதே இல்லை, ராஜ்யசபா எம்.பி. என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications