பீகார் சட்டசபை தேர்தலில் சாதித்தது "சமூக நீதி" கூட்டணி- அழியவில்லை கூட்டணி சகாப்தம்!!
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி மூலம் இந்தியாவில் கூட்டணி ஆட்சிக் காலம் மலையேறிவிட்டதாக 'மிதப்பாக' கருத்து தெரிவித்தவர்கள் முகத்தில் கரிபூசப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 282 இடங்களைக் கைப்பற்றி தனித்து ஆட்சியை அமைத்தது. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் கூட்டணி ஆட்சி முறையையே ஒழித்துக் கட்டிவிட்டோம் என்று பா.ஜ.க. மார்தட்டியது.

ஆனால் அதே பாரதிய ஜனதா கட்சிதான் மகாராஷ்டிராவில் சிவசேனாவை சேர்த்துக் கொண்டு கூட்டணி அரசை அமைத்தது. மேலும் பீகாரில் பரம வைரிகளாக இருந்த நிதிஷ்குமாரும் லாலு பிரசாத் யாதவும் கை கோர்த்தபோது ஏகடியம் பேசியது பா.ஜ.க.
இந்த கூட்டணியே நிலைக்காது என்று முதலில் கிண்டலடித்தது பா.ஜ.க. ஆனால் இடஒதுக்கீடு, மதச்சார்பின்மை போன்ற சமூக நீதி விவகாரங்களில் சற்றும் சமரசம் செய்யாத தலைவர்களாக லாலுவும் நிதிஷ்குமாரும் இருந்ததால் கூட்டணி வலுவாகவே இருந்தது.
தொகுதிப் பங்கீட்டிலாவது இந்த இரு கட்சிகளின் கூட்டணி உடைந்துவிடாதா என்ற எதிர்பார்ப்பும் பா.ஜ.க.விடம் இருந்தது. இதனால் பா.ஜ.க. ஆதரவு ஊடகங்கள், தொகுதிப் பங்கீட்டின் போதே இரு கட்சிகளிடையே பிளவு ஏற்பட்டது; கூட்டணி உடைந்தது என்றே செய்திகள் வெளியிட்டன.
ஆனால் எந்த ஒரு பஞ்சாயத்துமே இல்லாமல் 234 தொகுதிகளில் இரு கட்சிகளும் சரி சமமாக 101 தொகுதிகளில் போட்டியிடுவோம் என்று அறிவித்தனர் நிதிஷும் லாலுவும். அதனைத் தொடர்ந்து முதல்வர் வேட்பாளர் என்ற குழப்பத்தில் இந்த கூட்டணி இருப்பதாக கிளப்பிவிடப்பட்டது. நிச்சயம் லாலு பிரசாத் யாதவ், முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்கமாட்டார் என்று பா.ஜ.க.வும் அதன் ஆதரவு குரல்களும் கூறிவந்தன.
இருப்பினும் தெள்ளத் தெளிவாக, எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் நிதிஷ்குமார்தான் என்றும் எங்கள் குடும்பத்தினர் யாரும் முதல்வர் வேட்பாளர் இல்லை என்றும் லாலு பிரசாத் அறிவித்தார். இப்படி பாரதிய ஜனதாவுக்கு எதிராக ஒரே அணியாக நின்றே ஆக வேண்டும் என்பதில் நிதிஷ்குமாரும் லாலு பிரசாத் யாதவும் உறுதியாக இருந்ததால்தான் மக்கள் நம்பிக்கையோடு வாக்களித்து ஆட்சி பீடத்தில் அமர வைத்துள்ளனர்.
அரசியலில் சம பலத்துடன் கால் நூற்றாண்டு காலம் எதிர் எதிர் துருவங்களாக அரசியல் செய்த இரு கட்சிகள் சமூகநீதி என்ற அடிப்படை கொள்கைக்காக ஒரே கூட்டணியாக சேர முடியும்; கூட்டணி அரசையுமே அமைக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்கள் நிதிஷ்குமாரும் லாலு பிரசாத் யாதவும்..
இந்த வெற்றி மூலம் இந்தியாவில் கூட்டணி ஆட்சி சகாப்தத்தையே ஒழித்தோம்... அழித்தோம் என்று மார்தட்டிய கூக்குரல்களின் வாயில் மண்ணை அள்ளிப் போட்டு மவுனியாக்கி மகத்தான சாதனை படைத்திருக்கிறார்கள் நிதிஷ்குமாரும் லாலுபிரசாத் யாதவும்.












Click it and Unblock the Notifications