என்.எல்.சி. தொழிலாளர்கள் விவகாரம்... பிரதமரிடம் 48 அ.தி.மு.க. எம்.பி.க்கள் நேரில் வலியுறுத்தல்
டெல்லி: என்.எல்.சி. தொழிலாளர்கள் விவகாரத்தில் சுமூக தீர்வை ஏற்படுத்த கோரி அ.தி.மு.க. எம்.பி.க்கள் 48 பேரும் இன்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்தினர். இதேபோல் நிலக்கரித் துறை அமைச்சர் பியூஷ் கோயலையும் அ.தி.மு.க. எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.
நெய்வேலி என்.எல்.சி. தொழிலாளர்கள் ஊதிய மாற்று ஒப்பந்தம் ஏற்படுத்த கோரி கடந்த மாதம் 20-ந் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒப்பந்த தொழிலாளர்களும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு இந்த போராட்டத்தில் குதித்தனர். கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கடந்த 18-ந் தேதி முதல் தொடர் உண்ணாவிரதத்தையும் தொடங்கி உள்ளனர்.
தொழிலாளர்களுடனான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், இப்பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார்.
இதைத் தொடர்ந்து துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் அ.தி.மு.க. எம்.பி.க்.கள் 48 பேர் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். அப்போது, என்.எல்.சி. தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி கோரிக்கை மனுவையும் அவர்கள் அளித்தனர்.
மனுவைப் பெற்றுக்கொண்ட பிரதமர், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். மேலும், நிலக்கரித்துறை அமைச்சர், அதிகாரிகளையும் அ.தி.மு.க. எம்.பி.க்கள் சந்தித்து பேசினர்.