இன்று கூடுகிறது நாடாளுமன்றம்... முட்டுக்கட்டை விலகுமா?
டெல்லி: எதிர்க்கட்சிகளின் அமளியால் தொடர்ந்து முடங்கி வரும் பாராளுமன்றம், 2 நாள் விடுமுறைக்குப்பின் இன்று மீண்டும் கூடுகிறது. ஆனால் சுமூகமாக இந்தத் தொடர் நடக்குமா என்பது சந்தேகமாகவே உள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 21-ந்தேதி தொடங்கியது. இதில் லலித்மோடி விவகாரம், வியாபம் ஊழல் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பிய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தொடரின் முதல் நாளிலிருந்தே மோடி அரசுக்கு பெரும் சவாலாகத் திகழ்கின்றன.
இந்த விவகாரங்கள் குறித்து விவாதம் நடத்த தயார் என கூறிய மத்திய அரசு, நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்த ஒத்துழைக்குமாறு எதிர்க்கட்சிகளிடம் கேட்டுக்கொண்டது.
ஆனால் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள், அவை நடவடிக்கைகளை தொடர்ந்து முடக்கி வருகின்றன.
தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் 25 பேரை 5 நாட்கள் இடைநீக்கம் செய்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள், நாடாளுமன்ற வளாகத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.
நடப்பு கூட்டத்தொடர் முடிய இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்த அனுமதிக்குமாறும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபைக்கு வருமாறும் மத்திய அரசு கோரிக்கை விடுத்து உள்ளது.
இது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி வெங்கையா நாயுடு நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘8 முக்கியமான மசோதாக்கள் நிறைவேற்ற வேண்டியுள்ளது. ஏற்கனவே 4 மசோதாக்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளன. எனவே காங்கிரஸ் கட்சி தனது கடமையை உணரும் என நம்புகிறேன்' என்றார்.
அவர் மேலும் கூறும்போது, ‘தயவு செய்து சபைக்கு வாருங்கள் என நான் அவர்களிடம் (காங்கிரஸ்) கூறியுள்ளேன். திங்கட்கிழமை திங்கட்கிழமையாகவே இருக்க வேண்டும், ஞாயிற்றுக்கிழமையாக இருக்கக்கூடாது என நான் விரும்புகிறேன். என்ன நடக்கிறது? என்று நாளை (இன்று) பார்க்கலாம்' என்றார்.
மேலும் நாடாளுமன்றத்தை அமைதியாக நடத்த ஒத்துழைக்குமாறு உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கும் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
ஆனால் மத்திய அரசின் இந்த வேண்டுகோளை காங்கிரஸ் கட்சி நிராகரித்து விட்டது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், ‘பா.ஜனதா தலைவர்களின் எண்ணங்கள் அனைத்தும் தனிப்பட்ட நபர்களை தாக்குவதாக மாறியிருப்பது துரதிர்ஷ்டவசமானது. இத்தகைய துஷ்பிரயோக அரசியல், ஒருபோதும் ஒருமித்த இந்தியாவை உருவாக்குவதற்கான அரசியலுக்கு மாற்றாகாது என்பதை மோடி அரசுக்கு பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறோம்' என்றார்.
இந்தநிலையில் 2 நாள் விடுமுறைக்குப்பின் பாராளுமன்றம் இன்று (திங்கட்கிழமை) கூடுகிறது. 5 நாள் இடைநீக்கம் முடிந்துவிட்டதால் காங்கிரஸ் உறுப்பினர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது.