சட்டீஸ்கரில் மோடி: நக்சல்களிடம் பிணையக்கைதிகளாக 200 பேர் - உறுதிப்படுத்திய முதல்வர் ராமன்சிங்
ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் பிரதமர் மோடியின் பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அம்மாநிலத்தின் தாண்டேவாடா மாவட்டத்தில் கிராம மக்கள் சுமார் 200 பேரை நக்சலைட்டுகள், பிணையக்கைதியாக பிடித்து வைத்துள்ளதாக கூறப்பட்டது உண்மைதான் என்று தகவலை உறுதிப்படுத்தியுள்ளார் அம்மாநில முதல்வர் ராமன் சிங்.
நக்சலைட்டுகள் ஆதிக்கமுள்ள, சட்டீஸ்கர் மாநிலத்தின் தாண்டேவாடா பகுதிக்கு பிரதமர் மோடி இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மரிங்கா கிராமத்தை சேர்ந்த 300 பேரை நக்சலைட்டுகள் பணையக் கைதிகளாக பிடித்துச் சென்றதாக தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து சட்டீஸ்கர் தலைமை காவல்துறை அதிகாரி எஸ்.டி. ஸ்ரவன், கூறுகையில், "மாவோயிஸ்டுகள் யாரையும் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கவில்லை. மரிங்கா கிராமப் பொதுமக்களுடன் நேற்று இரவு முதல், நக்சலைட்டுகள் சிலர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இது வெறும் கூட்டம் மட்டுமே தவிர யாரும் பணயக் கைதிகளாக பிடிக்கப்படவில்லை.
மோடியின் பொதுக்கூட்டத்தில் மக்களைக் கலந்து கொள்ள விடாமல் செய்யவே மாவோயிஸ்டுகள் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர்" என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அம்மாநில முதல்வர் ராமன் சிங் இத்தகவலை உறுதி செய்துள்ளார். மாவோயிஸ்டுகள் கிராம மக்கள் 200 பேரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர் எனவும், அவர்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். காலையில் இச்செய்தியை மறுத்த காவல்துறை அதிகாரிகளும் இதனை உறுதிப் படுத்தியுள்ளனர். மேலும் ஏற்கனவே பிணையமாகப் பிடிக்கப்பட்டவர்களில் இருவர் மீட்கப்பட்டுவிட்டதாகவும், மற்றவர்களையும் மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே மோடியின் வருகையைக் கண்டித்து சாலையெங்கும் மரங்களை வெட்டி மாவோயிஸ்டுகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மோடிக்கு எதிராக சுவரொட்டிகளையும் ஓட்டி கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். மக்களை மோடியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள விடாமல் செய்வதற்காகவே அவர்கள் இரண்டு நாள் வேலை நிறுத்ததிற்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications