மாயாவதியின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை.. தேர்தல் ஆணையம் 'பொளேர்'
உத்தரப்பிரதேச தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது என்று மாயாவதி கூறிய குற்றச்சாட்டில் உண்மை தன்மை இல்லை என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலத் தேர்தலுக்கான வாக்குப் பதிவில் முறைகேடு நடந்துவிட்டதாகவும், தேர்தல் முடிவுகள் நம்பும்படியாக இல்லை என்றும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டினார். இந்த குற்றச்சாட்டில் உண்மை இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியானது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உத்தரப் பிரதேச மாநில தேர்தலில் பாஜக 322 இடங்களில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது பாஜக.
ஆளும் சமாஜ்வாதி மற்றும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆகியவை இணைந்து 54 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. ஆனால் பகுஜன் சமாஜ் கட்சி 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
இதுகுறித்து மாயாவதி செய்தியாளர்களிடம் பேசுகையில், வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளது. அதில் எந்த பொத்தானை அழுத்தி வாக்களித்தாலும் அவை அனைத்தும் பாஜகவுக்கு சேர்ந்துவிடும் வகையில் முறைகேடு நிகழ்ந்துள்ளது.
இந்த முடிவுகள் நம்பும்படியாக இல்லை. பாஜக ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகத்துக்கு பேராபத்து. பெரும்பாலான முஸ்லிம் தொகுதிகளில் அவர்கள் அளித்த வாக்குகள் அனைத்தும் பாஜகவுக்கு கிடைத்துள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கையை உடனடியாக நிறுத்தி மறுதேர்தல் நடத்துமாறு தேர்தல் ஆணையத்துக்குக் புகார் கடிதம் எழுதியுள்ளதாக மாயாவதி தெரிவித்தார்.
இந்நிலையில் மாயாவதியின் குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்துள்ள தேர்தல் ஆணையம், மாயாவதியின் குற்றச்சாட்டில் உண்மை தன்மை இல்லை எனவும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பின்னரே வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்டது எனவும் விளக்கம் அளித்துள்ளது.