தற்போதைக்கு தேர்தல் கருத்துகணிப்புக்கு தடை விதிக்கும் திட்டமில்லை: கபில்சிபல் திட்டவட்டம்
வாக்குப்பதிவு நடைபெறும் 48 மணி நேரத்துக்கு முன்பு தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிட தடை விதிப்பதற்கு தேர்தல் ஆணையத்துக்கு ஏற்கெனவே சட்டப்பூர்வ அதிகாரம் உள்ள நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, இறுதிக் கட்டத் தேர்தல் நடந்து முடியும் நாள் வரையிலும் கருத்துக்கணிப்புகளுக்கு தடைவிதிக்க கோரிய தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக சமீபத்தில் மத்திய சட்ட அமைச்சரான கபில்சிபல் தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, இது தொடர்பான சட்ட திருத்தம் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக செய்திகள் வெளியாகின. ஆனால், தற்போது அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் கபில்சிபல்.
மேலும், இது தொடர்பாக அவர் தெரிவித்த கருத்தாவது, ‘இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய பின்பு தான் எந்தமுடிவும் எடுக்கப்படும். தற்போதைக்கு தேர்தல் கருத்து கணிப்புகளுக்கு தடைவிதிக்கும் நோக்கம் மத்திய அரசிடம் இல்லை' எனத் தெரிவித்துள்ளார்.