அப்பீல் செய்ய அரசியல் நெருக்கடியில்லை: கர்நாடக முதல்வர் சித்தராமையா
பெங்களூரு: ஜெயலலிதா வழக்கில் ஹைகோர்ட் வழங்கியுள்ள தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு அப்பீல் செய்வது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று தெரிவித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, இதில் அரசியல் நெருக்கடி ஏதுமில்லை என்று கூறினார்.
சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு கர்நாடகாவில் பொறுப்பேற்று, 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பெங்களூருவில் இன்று பத்திரிகையாளர்களுடனான கலந்துரையாடல் நடத்தினார் சித்தராமையா. அப்போது, ஜெயலலிதா வழக்கில் கர்நாடகா அப்பீல் செய்யுமா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்து சித்தராமையா கூறுகையில், தீர்ப்பு நகலை கர்நாடக சட்ட வல்லுநர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அரசு தரப்பில் வாதிட தனக்கு வாய்ப்பே தரப்படவில்லை என்று, அரசு தரப்பு வக்கீல் ஆச்சாரியா கூறியதையும் அரசு கவனத்தில் எடுத்துள்ளது.
மேல்முறையீடு செய்ய சாதகமான அம்சங்கள் உள்ளனவா என்பதை தீர்ப்பு பக்கங்கள் முழுமையையும் படித்து பார்த்த பிறகு சட்ட வல்லுநர்கள் குழு முடிவு செய்யும்.
இந்த வழக்கில் அதிமுக அல்லது திமுக சம்மந்தப்பட்டுள்ளதா என்று கர்நாடக அரசு பார்க்கவில்லை. சட்ட பிரச்சினையாக மட்டுமே இதை அணுகுகிறது. அரசியல் காரணங்களின் கோணத்தில் இந்த வழக்கு பார்க்கப்படவில்லை. இவ்வாறு சித்தராமையா கூறினார்.












Click it and Unblock the Notifications