ஆந்திரா சிறையில் உள்ள 32 தமிழரை விடுதலை செய்ய முடியாது: சந்திரபாபு நாயுடு திமிர் பேச்சு
சித்தூர்: ஆந்திரா சிறையில் உள்ள 32 தமிழரை விடுதலை செய்ய முடியாது என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு திமிர்த்தனமாக கூறியுள்ளார்.
ஆந்திராவுக்கு வேறு கூலிக்கு சென்ற தமிழர்களை செம்மரம் கடத்தினார்கள் எனக் கூறி கைது செய்து சிறையில் அடைப்பதை அம்மாநில போலீசார் வழக்கமாக வைத்துள்ளனர். அண்மையில் 32 தமிழர்களை கொத்தாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளது ஆந்திரா அரசு.
இந்த 32 தமிழர்கள் கைதுக்கு ஒட்டுமொத்த தமிழகமும் கண்டனம் தெரிவித்து வருகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் 32 தமிழர்களை விடுவிக்க வேண்டும் என்று ஆந்திரா அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

ஆந்திரா அமைச்சரின் இறுமாப்பு
இதனிடையே நேற்று சென்னை வந்த ஆந்திரா அமைச்சர் தண்டா சீனிவாசராவிடம் 32 தமிழர் விடுதலை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் அவர் பதில் சொல்ல முடியாது என இறுமாப்புடன் கூறிச் சென்றுவிட்டார்.

சந்திரபாபு நாயுடுவின் திமிர் பேச்சு
இந்த நிலையில் சித்தூர் மாவட்டம் குப்பத்துக்கு இன்று வருகை தந்தார் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு. அவரிடம் 32 தமிழர் விடுதலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சந்திரபாபு நாயுடு அளித்த திமிர்த்தனமான பதில்:
சித்தூர் மாவட்டத்தில் விலை மதிப்புமிக்க செம்மரங்கள் தொடர்ந்து வெட்டி கடத்தப்படுகின்றன. அதை அனுமதிக்க இயலாது.

அப்பாவிகள் அல்ல
கைதான 32 தமிழரும் அப்பாவிகள் அல்ல. அவர்கள் நல்லவர்கள் என்று யாரும் நியாயப்படுத்த முடியாது.

விடுவிக்கவே முடியாது
செம்மரம் வெட்டி கடத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 32 தமிழர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை விடுதலை செய்ய இயலாது.

கடும் நடவடிக்கை உறுதி
இது பற்றி தமிழக அரசுக்கு ஆந்திரா அரசு உரிய விளக்கத்தை அளிக்கும். செம்மரக் கடத்தல்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு சந்திரபாபுநாயுடு கூறினார்.












Click it and Unblock the Notifications