காவிரி தீர்ப்பு வந்த பிறகு பார்த்துக்கலாம்.. பெங்களூரில் வழக்கம்போல இயங்கும் பள்ளி, கல்லூரிகள்!
Recommended Video
பெங்களூர்: காவிரி வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ள நிலையில், கர்நாடக மாநில தலைநகரம், பெங்களூரில் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணியளவில் தீர்ப்பு வழங்குகிறது. ஒருவேளை கர்நாடகா விரும்பாத தீர்ப்பு வெளியானால் கன்னட அமைப்பினர் வழக்கம்போல கலவரம் நடத்தலாம் என்ற பயம் கர்நாடகவாழ் தமிழர்களிடம் உள்ளது.
கன்னட அமைப்பினர் பொதுவாக இதுபோன்ற சூழ்நிலைகளில் தமிழக வாகனங்கள், திறந்திருக்கும் கடைகள், சாலைகளில் இயங்கும் வாடகை வாகனங்களை குறி வைத்து தாக்குவார்கள்.
இந்த நிலையிலும், பெங்களூரில் இன்று பள்ளிகள் வழக்கம்போல இயங்குகின்றன. கல்லூரிகள், அலுவலகங்களும் திறந்துள்ளன.
தீர்ப்பு வெளியான பிறகு வன்முறை எந்த அளவுக்கு இருக்கும் அல்லது இயல்பு வாழ்க்கை நீடிக்குமா என்பதை பொறுத்து, பள்ளி வாகனங்கள் மாலையில் இயக்கப்படும் என்று பள்ளி நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை பள்ளி வாகனங்களை இயக்க முடியாத சூழ்நிலை இருந்தால் சொந்த வாகனங்களில், குழந்தைகளை பெற்றோர் வீடுகளுக்கு அழைத்துவர வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது.
வன்முறையை தவிர்க்க காலை முதல் பெங்களூரில் போலீஸார் ரோந்து செல்கிறார்கள். மண்டியா, மைசூர், ராமநகரம் ஆகிய காவிரி கரையோர மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.