மோடியை அடுத்து கெஜ்ரிவாலுக்கும் மெழுகுச் சிலை வைக்கும் மேடம் டுசாட்ஸ்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை அடுத்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் லண்டனில் உள்ள மேடம் டுஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகுச் சிலை வைக்க உள்ளனர்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் உலக பிரபலங்களின் மெழுகுச் சிலைகள் உள்ளன. பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான், ரித்திக் ரோஷன், நடிகை ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர், மாதுரி தீக்ஷித் உள்ளிட்டோரின் மெழுகுச் சிலைகள் அங்கு உள்ளன.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் மெழுகுச் சிலையை அருங்காட்சியகத்தில் வைக்க நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து ஒரு குழு டெல்லி வந்து மோடியை வகை, வகையாக போட்டோ எடுத்து அளவு எடுத்துவிட்டு சென்றுள்ளது.
மோடியின் மெழுகுச் சிலை இன்னும் ஒரு சில வாரங்களில் தயாராகிவிடும். இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மெழுகுச் சிலையை செய்து டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்க உள்ளார்களாம்.
கெஜ்ரிவாலின் மெழுகுச் சிலையும் மஃப்ளர் அணிந்தபடி இருக்குமா என்பது தெரியவில்லை. டுசாட்ஸ் அருங்காட்சியகத்தின் கிளையை அடுத்த ஆண்டு டெல்லியில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.