ஜீரோ முதலீடு.. ஏகப்பட்ட பலன்கள்.. யோகா பண்ணுங்க!- பிரதமர் மோடி
சண்டிகர்: யோகா தினம் இப்போது ஒரு மக்கள் இயக்கமாகிவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இரண்டாவது சர்வதேச யோகா தினத்தையொட்டி இன்று, சண்டிகரில் நடந்த பிரமாண்ட யோகா நிகழ்வில் கலந்து கொண்டார் பிரதமர் மோடி. கேப்பிடல் காம்ப்ளெக்சில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மோடியுடன் அவரது அமைச்சரவை சகாக்கல் 56 பேர் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர்.
வெள்ளை உடையில் வந்திருந்த மோடி, இந்த முறை கவனமாக தேசியக் கொடியை தோளில் அணிவதைத் தவிர்த்திருந்தார்.
7000 பாதுகாப்பு வீரர்கள், 4000 பாரா மிலிட்டெரி ஜவான்கள், 3000 சண்டிகர் போலீஸ் அதிகாரிகள் இந்த நிகழ்ச்சிக்கு காவலாக நின்றனர்.
ரூ 14 கோடி செலவு
இந்த நிகழ்ச்சிக்காக மத்திய ஆயுஷ் அமைப்பு ரூ 14 கோடியைச் செலவழித்திருந்தது.
நிகழ்ச்சியில் காலை 7 மணியிலிருந்து 7.45 வரை பங்கேற்ற மோடி, பல்வேறு யோகப் பயிற்சிகளை மேற்கொண்டார்.
பின்னர் பேசிய அவர், "யோகா மற்றும் யோகா தின கொண்டாட்டங்களுக்கு உலகெங்கிலுமிருந்து ஆதரவு பெருகி வருகிறது. சமூகத்தின் அனைத்து பிரிவுகளிலிருந்தும் யோகாவுக்கு ஆதரவு கிடைத்து வருகிறது.
இன்று யோகா மக்கள் இயக்கமாக மாறிவிட்டது.
யோகா வாழ்க்கையில் ஒழுக்கத்தை கற்றுத் தருவதுடன், மனம் மற்றும் மூளையை ஒருங்கிணைத்து செயல்படும். யோகா செய்பவர்கள் ஆரோக்கிய வாழ்வு வாழ்வர்.
A bird's eye view of the #YogaDay celebrations in Chandigarh. Photo credit: Pradip Das Gupta pic.twitter.com/y6NYY8Sh4U
— PIB India (@PIB_India) June 21, 2016
முதலீடு இல்லாமல் கிடைக்கும் இப்பயனை அனைவரும் தினமும் கடைபிடிக்க வேண்டும்.
யோகாவை பயில ஏழை பணக்காரர், படித்தவர் - படிக்காதவர் என்ற பேதமில்லை. யோகவை பள்ளிகளில் பாடமாக கொண்டுவரப்படும். சிறந்த யோகா ஆசிரியர்களை உருவாக்கி உலகம் முழுவதும் யோகாவை பிரபலப்படுத்த வேண்டும்.
யோகாவின் பயன்கள் மற்றும் சக்தியை பலர் உணராமல் இருப்பது வருத்தமளிக்கிறது.
2017-ஆம் ஆண்டு முதல் இரண்டு யோகா விருதுகள் வழங்கப்படும்," என்றார்.