கர்நாடகாவில் ஆம்புலன்ஸில் படுத்தபடியே காதலனை மணந்த நர்ஸிங் மாணவி
பெங்களூர்: கர்நாடகாவில் இளம்பெண் ஒருவர் ஆம்புலன்ஸில் படுத்தபடி தனது காதலனை திருமணம் செய்துள்ளார்.
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள பி.ஜி. கெரே கிராமத்தில் வசிக்கும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் நேத்ராவதி. இறுதியாண்டு நர்ஸிங் டிப்ளமோ படித்து வருகிறார். அவர் சல்லகெரேவை சேர்ந்த குருசாமி என்பவரை காதலித்தார்.
அமாவாசை அன்று அப்பகுதியில் பல ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்க சித்துர்காவில் உள்ள முருகராஜேந்திர ப்ரிஹான் மடத்தின் தலைவர் முருகராஜேந்திர சாமி ஏற்பாடு செய்தார். அதில் கலந்து கொண்டு திருமணம் செய்து கொள்ள நேத்ராவதியும், குருசாமியும் முடிவு செய்தனர்.
இந்நிலையில் நேத்ராவதி தனது காதலருடன் சித்ரதுர்கா கோட்டையை சுற்றிப்பார்க்க சென்ற இடத்தில் கால் தவறி கீழே விழுந்தார். இதில் அவரது முதுகு எலும்பில் அடிபட்டு படுத்தபடுக்கையாகிவிட்டார்.
இதையடுத்து அவரை பெங்களூரில் உள்ள நிம்ஹான்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் அவர் ஜூன் 5ம் தேதி சாமியார் நடத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திருமணம் செய்யும் தனது விருப்பத்தை மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்தார்.
அவர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் சித்ரதுர்காவுக்கு அனுப்பி வைத்தனர். ஆம்புலன்ஸில் படுத்தபடியே அவர் குருசாமியை மணந்து கொண்டார். இதையடுத்து நேத்ராவதி சித்ரதுர்கா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்டால் சில மாதங்களில் நேத்ராவதியால் பழையபடி நடமாட முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.