காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய ஒபாமா... மிஷல் வரவில்லை!
டெல்லி: அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா ராஜ்காட் சென்று மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று காலை டெல்லி வந்தார். விமான நிலையத்தில் அவரை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். இதையடுத்து ஒபாமா, தனது மனைவி மிஷலுடன் ஐடிசி மவ்ரியா ஹோட்டலுக்கு சென்றார்.
பின்னர் அவர் மட்டும் ராஷ்ட்ரபதி பவன் வந்து முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இந்திய குடியரசு தின விழாவில் கலந்து கொள்வது கௌரவமான விஷயம் என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதையடுத்து அவர் ராஷ்ட்ரபதி பவனில் இருந்து கிளம்பி ராஜ்காட் சென்றார். ராஜ்காட்டில் காந்தியின் நினைவிடத்தில் அவர் மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார்.
ராஜ்காட் வளாகத்தில் அவர் மரக்கன்று ஒன்றை நட்டு வைத்தார். அங்கு வைக்கப்பட்டுள்ள பதிவேட்டில் கையெழுத்திட்டார். ஒபாமாவுக்கு காந்தி சமாதி நிர்வாகத்தினர் மகாத்மாவின் சிலை மற்றும் ராட்டு ஆகியவற்றை பரிசாக அளித்தனர்.
ராஜ்காட்டுக்கு ஒபாமாவுடன் மிஷலோ, மோடியோ வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.