ஒபாமா ஸ்டைலில் "மோடி கேர்"... ஏழை மக்களின் வாக்குகளை குறிவைத்த பாஜக!
10 கோடி ஏழை குடும்பங்களுக்கு வருடத்திற்கு 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ வசதிக்கான காப்பீடு வழங்கப்படும். இதன் மூலம் 50 கோடி மக்கள் பயனடைவார்கள் என மோடி கேர் திட்டத்தை அறிவித்துள்ளது பாஜக அரசு
Recommended Video

டெல்லி: ஒபாமா கேர் போல இந்தியாவில் 'மோடி கேர்' எனப்படும் இலவச மருத்துவ காப்பீடு திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளது. இதன் மூலம் 50 கோடி ஏழை, கிராம மக்களின் வாக்குகளை குறிவைத்துள்ளது பாஜக.
நாடாளுமன்றத்தில் 2018 - 19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை அருண் ஜெட்லி தாக்கல் செய்துள்ளார். அதில் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் மூலம் 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஒபாமா அதிபராக இருந்த போது, நாட்டு மக்களின் நலன் கருதி, குறைந்த கட்டண மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்தார். அதே போல மோடிகேர் என்ற பெயரில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ திட்டம் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நோய் வந்தவர்கள் சிகிச்சைக்காக செலவு செய்து கடனாளியாகின்றனர். பலரோ செலவு செய்ய பணமில்லாமல் நோய் முற்றி இறந்து விடுகின்றனர். சிறுநீராக கோளாறுகள், இதயநோய், உறுப்பு செயலிழப்பு என பல கொடிய நோய்கள் ஏழை,நடுத்த மக்களையும், கிராம மக்களையும் தாக்குகின்றன.

ஏழை, கிராம மக்கள்
கிராம, ஏழை மக்களை கவரும் வகையில் புதிய மருத்துவக்காப்பீடு திட்டம் 10 கோடி குடும்பங்களுக்கு செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காச நோயாளிகளின் சிகிச்சைக்காக ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநில அரசுடன் இணைந்து கல்வித்துறையை மேம்படுத்தும் முயற்சியிலும் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

பரிசோதனை மையங்கள்
என்ன நோய் என்று அறிந்து கொள்வதற்காக செய்யப்படும் சோதனைக்காகவே சில ஆயிரங்களை செலவழிக்க வேண்டும். இதனை கருத்தில் கொண்டே இலவச நோய் பரிசோதனை மையம் அமைக்க ரூ.1,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிதாக 1.5 லட்சம் மையங்கள் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்ஐசியில் சிறப்புத்திட்டம்
மூத்த குடிமக்களுக்கு எல்.ஐ.சி மூலம் சிறப்பு திட்டம், ஓய்வு ஊதியம் பெறுவோருக்கு 40000 ரூபாய் வரை வட்டி வருமானத்தில் வரி பிடித்தம் இல்லை. மேலும் மருத்துவ காப்பீடுக்காக செய்யப்படும் செலவில் 50000 ரூபாய் வரை ஓய்வு ஊதியம் பெறுவோருக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்று கூறியுள்ளார் ஜெட்லி.

கவர்ச்சி அறிவிப்புகள்
அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை மனதில் வாக்குகளை அறுவடை செய்யும் நோக்கில் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன என்பது எதிர்கட்சியினரின் குற்றச்சாட்டு. 120 கோடிக்கும் மேல் உள்ள இந்தியாவில் 10 கோடிக்கு பேருக்கு மட்டுமே மருத்துவக்கப்பீடு கொடுப்பது எப்படி சரியாகும் என்று கேள்வி எழுப்புகின்றனர்.

வாக்குவங்கியை குறிவைத்த பாஜக
மருத்துவம் ஏழைகளுக்கு இலவசமாக அளிக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்து வரும் நிலையில் மக்களை ஏமாற்றும் வகையில் இந்த திட்டம் உள்ளது என்பது எதிர்கட்சியினரின் கருத்தாகும். அதே நேரத்தில் ஏழைகள், கிராம மக்கள், விவசாயிகளுக்கு நன்மை தரக்கூடிய பட்ஜெட் இந்த பட்ஜெட்டிற்கு பாராட்டு பத்திரம் வாசித்துள்ளார் பிரதமர் மோடி.












Click it and Unblock the Notifications