உங்க மனைவியை 'ஜீன்ஸ்' போட விடாம தடுக்குறீங்களா.. அப்ப "டைவர்ஸ்" உறுதி!
மும்பை: மும்பையில் மனைவியை நாகரிக உடை அணியவிடாமல் தடுத்த கணவருக்கு எதிரான அதிரடி தீர்ப்பை வெளியிட்டுள்ளது மும்பை குடும்பநல நீதிமன்றம்.
அதாவது, மனைவியை ஜீன்ஸ் போன்ற ஆடைகள் அணிய விடாமல் தடுப்பதும் அடக்குமுறையின் அடையாளம் ஆகும்.
எனவே, இக்காரணத்திற்காக விவாகரத்து வழங்கப்படலாம் என்று அத்தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பநலக் கோட்டில் மனு:
இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள மும்பை தம்பதிகளுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில்தான் மும்பை குடும்பநலக் கோட்டில் மனைவி ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.
வரதட்சணைக் கொடுமை:
அம்மனுவில், அவரது மாமனார், மாமியார் அவரை மிகவும் கொடுமை படுத்துவதாகவும், தன்னுடைய தாய்வீட்டில் இருந்து 1 லட்சம் வரதட்சணை வாங்கி வரும்படி கொடுமை படுத்தியதாகவும் கூறியிருந்தார்.
ஜீன்ஸ் அணியத் தடை:
மேலும், கணவர் உடைகளுக்கு கூட பணம் தராததால் தானே ஜீன்ஸ், குர்தா போன்ற உடைகளை வாங்கி அணிந்துள்ளார். ஆனால், ஜீன்ஸ் அணியக் கூடாது என்றும், புடவை மட்டுமே அணிய வேண்டும் என்றும் கணவர் வீட்டினர் அப்பெண்ணை கட்டாயப்படுத்தி உள்ளனர்.
கொலை மிரட்டல் விட்ட கணவர்:
இதனால், கணவரிடமிருந்து பிரிந்து வாழும் அப்பெண்ணுக்கு மீண்டும் கொலை மிரட்டல் போன்றவை கணவரின் வீட்டினரிடமிருந்து வந்துள்ளது.இதனால் தனக்கு கணவரிடமிருந்து விவாகரத்து வழங்க வேண்டும் என்று அப்பெண்மணி தன்னுடைய மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்தியத் திருமணச் சட்டம்:
இந்த மனுவை விசாரித்த மும்பை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி லட்சுமி ராவ் இந்தியத் திருமண சட்டம் 1954 ஆம் ஆண்டின் படி இத்தீர்ப்பை வழங்கினார்.
நீதிமன்றம் தீர்ப்பு:
அத்தீர்ப்பில் அவர், "இந்த வழக்கின் விசாரணையின் மூலம் கணவன் வீட்டார் அப்பெண்ணைக் கொடுமைப் படுத்தியது நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், மனைவியை ஜீன்ஸ், குர்தா அணியவிடாமல் கணவர் தடுப்பதை காரணமாக வைத்து விவாகரத்து வழங்கலாம்.
அதிரடி விவாகரத்து:
மனைவி விரும்பிய உடைகளை அணியவிடாமல் தடுப்பதும் ஒரு வகையில் கொடுமை தான். இதுபோன்ற காரணங்களுக்காக விவாகரத்து வழங்குவதற்கு, சட்டப்பிரிவில் இடம் உள்ளது. எனவே இவர்கள் இருவருக்கும் விவாகரத்து வழங்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.