கற்பனைக்கு எட்டாத செயல்... தந்தையின் சமாதியை அகற்றும் ஒடிஸா முதல்வர்
Recommended Video
புவனேஸ்வர்: மறைந்த பிஜூ ஜனதா தளம் கட்சியின் தலைவரும், ஒடிஸாவின் முன்னாள் முதல்வருமான பிஜு பட்நாயக் சமாதியை அகற்ற முடிவெடுத்துள்ளார் அவரது மகனும், ஒடிஸா முதல்வருமான நவீன் பட்நாயக்.
இந்தியாவில் எந்த அரசியல் கட்சித் தலைவரும் செய்யத்துணியாத அல்லது செய்ய நினைக்காத ஒரு காரியத்தை கையில் எடுத்திருக்கிறார் நவீன்.
சொந்த தந்தையின் சமாதியை அகற்றி பூரி நகரின் வளர்ச்சிப் பணிகளுக்கு வழியமைத்து கொடுத்திருப்பதன் மூலம் ஒட்டுமொத்த அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் முன் மாதிரியாக திகழ்கிறார் நவீன் பட்நாயக்.

சமாதி அகற்றம்
ஒடிஸா மக்களின் பேரன்புக்கும், பெருமரியாதைக்கும் உரியவராக வாழ்ந்து மறைந்த பிஜு பட்நாயக்கின் சமாதி கடற்கரை நகரமான பூரியின் சுவார்கத்வாரில் இருக்கிறது. இது அந்த நகரின் வளர்ச்சிப் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக பல ஆண்டுகளாக புகார்கள் எழுப்பப்பட்ட நிலையில், இப்போது அதை அப்புறப்படுத்தும் துணிச்சல் முடிவை எடுத்துள்ளார் நவீன் பட்நாயக்.

கொண்டாடிய ஒரிய மக்கள்
பிஜு பட்நாயக்கை ஒடிஸா மக்கள் கொண்டாடிய அளவுக்கு இந்தியாவில் எந்த தலைவரையும் அவர்களது மாநிலத்தில் மக்கள் கொண்டாடியதில்லை எனக் கூறலாம். அவர் மீது வைத்துள்ள பேரன்பின் காரணமாகவே ஒடிஸாவில் பிஜூ ஜனதா தளத்தின் கொடி தொடர்ந்து உயரப்பறக்கிறது. 5-வது முறையாக தொடர்ந்து அவரது மகன் நவீன் பட்நாயக்கை முதலமைச்சராக தேர்வு செய்துள்ளனர் ஒரிய மக்கள்.

முன் மாதிரி தலைவன்
சொந்தத் தந்தையின் நினைவிடமாக இருந்தாலும், காலத்தின் தேவைக்கேற்ப முற்போக்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் நவீன் பட்நாயக். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, ''எனது தந்தைக்கு நினைவிடம் அமைத்து தான் அவரை நினைக்க வேண்டும் என்ற நிலை இல்லை, கோடான கோடி ஒடிஸா மக்களின் இதயங்களில் அவர் வாழ்ந்துகொண்டிருக்கிறார்..இனியும் வாழ்வார்'' . தலைமுறைகள் கடந்தாலும் எனது தந்தை செய்த மக்கள் தொண்டு அவரது புகழை நிலைத்திருக்கச் செய்யும் எனக் கூறியிருக்கிறார்.

வளர்ச்சிப் பணி
சுவார்கத்வார் வளர்ச்சிப் பணிகளுக்கு முதற்கட்டமாக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தேவையான பணிகளை தொடங்குமாறு அரசு அதிகாரிகளுக்கு நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். நவீன் பட்நாயக்கின் இந்த முடிவை பிஜு ஜனதா தளத்தில் உள்ள ஒரு சிலர் ஏற்றுக்கொள்ள தயங்கிய நிலையில் அவர்களை சமாதானம் செய்து காலத்தின் அவசியத்தை உணர்த்தியுள்ளார்.

பிஜூ ஜனதா தளம்
பூரியின் சுவார்கத்வாரில் பிஜு பட்நாயக்கின் நினைவிடம் முழுவதும் அகற்றப்பட்டு, அதற்கு பதிலாக அவரது பெயர் பொறிக்கப்பட்ட நினைவுச்சின்னம் மட்டும் பொறிக்கப்படும் என பிஜு ஜனதா தளம் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் அமர் பட்நாயக் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications