மாவோயிஸ்டுகள் 'கோட்டையில் கரையை கடக்கும் ஹூட்ஹூட் புயல்... என்ன செய்யப் போகிறது ஒடிஷா அரசு?
ராயகடா: ஒடிஷாவில் மாவோயிஸ்டுகளின் கோட்டையாக கருதப்படும் மாவட்டங்களில்தான் ஹூட்ஹூட் புயல் கரையைக் கடக்க காத்திருக்கிறது. இதனால் கடந்த ஆண்டு பாய்லின் புயலின் போது செயல்பட்டது போல் ஒடிஷா அரசு சிறப்பாக இயங்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு இதே அக்டோபர் மாதம் இதே நாட்களில்தான் ஒடிஷாவின் கோலாப்பூரை தாக்கி கரையை கடந்தது பாய்லின் புயல். கடந்த முறை போலவே தாய்லாந்து கடற்பரப்பில் காற்றழுத்தத் தாழ்வு நிலை கடந்த வாரம் உருவானது. அதன் பின்னர் கடந்த ஆண்டைப் போலவே மெதுமெதுவாக நகர்ந்து அந்தமான் அருகே மையம் கொண்டிருக்கிறது.

ஒடிஷா மற்றும் ஆந்திரா கடற்கரையை வரும் சனிக்கிழமை இரவு முதல் இந்த ஹூட் ஹூட் புயல் தாக்கத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு பாய்லின் புயல் தாக்கிய போது முழு வீச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு உயிர்சேதத்தை தவிர்த்தது ஒடிஷா மாநில அரசு.
ஆனால் இம்முறை அழிவின் விளிம்பில் இருக்கும் பழங்குடி இனமக்கள் அதிகம் வாழுகிற மாவோயிஸ்டுகள் கோட்டையான கோரபுட், மல்காங்கிரி, ராயகடா மற்றும் கஜபதி மாவட்டங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்படக் கூடும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக கஞ்சம் மற்றும் கலஹாண்டி மாவட்டங்களின் பல பகுதிகளில் புயல் காற்றும் கனமழையும் கொட்டித் தீர்க்கலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இவை அனைத்துமே மாவோயிஸ்டுகளின் செல்வாக்கு மிக்க மாவட்டங்கள். இதனால் இப்பகுதிகளில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மனிதாபிமான அடிப்படையில் அரசு நிர்வாகத்தை மாவோயிஸ்டுகள் அனுமதிப்பார்களா? என்பதும் தெரியாத நிலையில் ஹூட் ஹூட் புயல் கரையை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் ஒடிஷாவில் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications