பாஜகவில் இணைந்தால் உடனடி ஜாமீன்.. ரூ. 20 கோடி பணம்.. டீல் பேசிய என்ஐஏ.. பரபரப்பு குற்றச்சாட்டு
திஸ்பூர்: பாஜக அல்லது ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்தால் உடனடியாக ஜாமீன் கிடைக்கும் என்றும் 20 கோடி ரூபாய் தருவதாகவும் என்ஐஏ அதிகாரிகள் டீல் பேசியதாக சமூக ஆர்வலர் அகில் கோகோய் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் கடும் போராட்டம் நடைபெற்றன. குறிப்பாக, என்ஆர்சிக்கு எதிராக அசாம் மாநிலத்தில் போராட்டம் மிகத் தீவிரமாக நடைபெற்றது.
அசாம் மாநிலத்தில் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களில் முக்கியமானவர் அகில் கோகோய். தகவலறியும் உரிமைச் சட்ட (ஆா்டிஐ) ஆர்வலரான இவர் போராட்டத்தை முன்னெடுத்தார்.

திடீர் கைது
இந்நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இவரது வீட்டில் தேசிய புலனாய்வு அதிகாரிகள்(என்ஐஏ) திடீர் சோதனை நடத்தினர். அப்போது அவரது டைரி, வங்கி கணக்குகள் தொடர்பான ஆவணங்களைக் கைப்பற்றினர். அவருக்குப் பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி என்ஐஏ கைது செய்தது. நீண்ட நாட்கள் அவர் சிறையிலேயே உள்ளார்.

பேரம் பேசிய என்ஐஏ
இந்நிலையில், அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், "முதலில் என்ஐஏ அதிகாரிகள் என்னை ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இணைய வலியுறுத்தினார்கள். நான் மறுத்ததால் பாஜகவில் இணையச் சொன்னார்கள். பாஜகவில் இணைந்தால் உடனடியாக ஜாமீன் கிடைக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். மேலும், வரும் தேர்தலுக்குப் பின் அமைச்சர் பதவியும் வழங்கப்படும் என்று என்ஐஏ அதிகாரிகள் பாஜகவுக்கா பேரம் பேசினார்கள்" என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

ரூ. 20 கோடி லஞ்சம்
இருப்பினும், அதற்குத் தான் உடன்பட மறுத்ததால் பல்வேறு பொய் வழக்குகள் தன் மீது போடப்பட்டதாகவும் இதனால் உச்ச நீதிமன்றத்தில் கூட தனக்கு ஜாமீன் கிடைக்க பெரும் சிரமம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். விசாரணையில் தன்னை உடல் மற்றும் மனரீதியாக என்ஐஏ அதிகாரிகள் சித்திரவதை செய்வதாகவும் அவர் கூறினார். மேலும், 20 கோடி ரூபாய் வரை தனக்கு என்ஐஏ அதிகாரிகள் லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

பாஜக மறுப்பு
இந்தக் குற்றச்சாட்டுகளை பாஜக முற்றிலுமாக மறுத்துள்ளது. இத்தனை காலம் அமைதியாக இருந்தவர் இப்போது மட்டும் ஏன் இப்படிப் பேசுகிறார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. விரைவில் அசாம் தேர்தல் நடைபெறவுள்ளதால் வாக்காளர்களை ஏமாற்ற அவர் இப்படிச் சொல்வதாகவும் அசாம் மக்கள் இதற்கெல்லாம் ஏமாற மாட்டார்கள் என்றும் பாஜக தெரிவித்துள்ளது. பெயர் வெளியிட விரும்பாத என்ஐஏ அதிகாரி ஒருவரும் இந்தக் குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications