சில முட்டாபசங்க கொடியை பறக்கவிட்டால் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் நடமாட்டமா?: ஒமர் அப்துல்லா கொந்தளிப்பு
டெல்லி: ஒருசில முட்டாள் இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். கொடியை பறக்கவிட்டால் ஜம்மு காஷ்மீரில் அந்த இயக்க தீவிரவாதிகள் நடமாட்டம் என்று கூறுவதா? என அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா கொந்தளித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் வரலாறு காணாத வெள்ளத்தால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இந்த வடு ஆறுவதற்கு முன்பு எல்லையில் பாகிஸ்தான் தொடர் தாக்குதல்களை நடத்தி பல்லாயிரக்கணக்கான எல்லையோர மக்களை இடம்பெறச் செய்தது.
இந்த விவகாரங்கள் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்குடன் டெல்லியில் அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா இன்று ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் ஒமர் அப்துல்லா கூறியதாவது:

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா. தலையிட வேண்டும் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது. இது மாநில விவகாரம் அல்ல. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும் மத்திய அரசும்தான் இதற்கு பதிலளிக்க வேண்டும்.
இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் தணிந்தால் நம்முடைய மக்களுக்குத்தான் நன்மையாக இருக்கும். ஜம்மு காஷ்மீரில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக ஊடகங்கள் எழுதுகின்றன.
யாரோ சில முட்டாள் இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் கொடியைப் பறக்கவிட்டால் உடனே ஜம்மு காஷ்மீரில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்க தீவிரவாதிகள் நடமாட்டம் என்று கூறிவிடுவதா? ஜம்மு காஷ்மீரில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் நடமாட்டத்துக்கு வாய்ப்பே இல்லை.
இவ்வாறு ஒமர் அப்துல்லா கூறினார்.












Click it and Unblock the Notifications