காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்- பெண் பலி! நூற்றுக்கணக்கான கிராம மக்கள் வெளியேற்றம்!!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் எல்லையோர கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பலியாகி இருக்கிறார். மேலும் நூற்றுக்கணக்கான எல்லையோர கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநில எல்லையில் கடந்த 9 நாட்களில் பாகிஸ்தான் ராணுவம் 8 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ராணுவம் நேற்று இரவும் சம்பா, கத்துவா பகுதிகளில் துப்பாக்கிச் சூடு நடத்தியது. சிறிய ரக பீரங்கிகள் மூலமும் தாக்குதல் நடத்தியது.

இதற்கு இந்திய தரப்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. பாகிஸ்தான் தரப்பில் இருவர் உயிரிழந்தனர். இந்திய தரப்பில் எல்லை கிராமத்தைச் சேர்ந்த 6 பேர் காயமடைந்தனர். அதிகாலை மூன்று மணி வரை இருதரப்பினரிடையேயும் சண்டை நீடித்தது.
சோர்காலி பகுதி வழியாக நடைபெறவிருந்த மிகப்பெரிய ஊடுருவல் முயற்சியை எல்லைப் பாதுகாப்புப் படை தடுத்து நிறுத்தியதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தொடர்பு கொண்ட எல்லை பாதுகாப்புப் படை இயக்குநர் ஜெனரல் கே.பதக் தெரிவித்தார்.
தீவிரவாதிகள் ஊடுருவ உதவுவதற்காகவே, திசை திருப்பும் முயற்சியாக எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
இந்த நிலையில் கத்துவா, சம்பா பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் எல்லையோர கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பலியாகி உள்ளனர். மேலும் முன்னெச்சரிக்கையாக எல்லையோர கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications