கலாபவன் மணி சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை.. உம்மன் சாண்டி உறுதி
சாலக்குடி: நடிகர் கலாபவன் மணி மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள மாநில முதல்வர் உம்மன் சாண்டி கூறியுள்ளார். கலாபவன் மணி வீட்டுக்கு இன்று சென்று துக்கம் விசாரித்த பிறகு இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த, மார்ச் 6ம் தேதி மரணமடைந்த, 45 வயதான கலாபவன் மணியின் சாவில் சந்தேகம் இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்த நிலையில், சாலக்குடியிலுள்ள அவரின் வீட்டுக்கு, முதல்வர் சாண்டி இன்று சென்றார்.
உறவினர்களுக்கு ஆறுதல் கூறிய சாண்டியிடம், கலாபவன் மணி சாவுக்கு காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் கோரிக்கைவிடுத்தனர். தடயவியல் ஆய்வு அறிக்கை வந்த உடன், உரிய நடவடிக்கை எடுப்பேன் என்று உம்மன் சாண்டி அப்போது உறுதியளித்தார்.
ஹைதராபாத்திலுள்ள தடயவியல் ஆய்வகத்தில், கலாபவன் மணி உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அவரது உடலில் விஷம் கலந்திருந்ததா என்பதற்கான விடை ஆய்வு முடிவில் தெரியவரும்.