தண்ணீர் கிடைக்காமல் அல்ல.. பன்றி காய்ச்சல் பாதிப்பால் மயங்கி விழுந்தாரா ஜெய்ஷா?
டெல்லி: நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக் விளையாட்டில் இந்தியா சார்பில் கேரளாவைச் சேர்ந்த ஜெய்ஷா (33) இவர் பெண்களுக்கான 42 கி.மீ மாரத்தனில் பங்கேற்றார். இந்த போட்டியில் 89வது இடத்தை பிடித்தார் ஜெய்ஷா. இலக்கை 2 மணி 47 நிமிடம் 19 வினாடிகளில் அவர் கடந்தார்.
இதனிடையே போட்டியின் போது தனக்கு இந்தியா சார்பில் தண்ணீர் கூட வழங்கவில்லை எனவும், இதனால் தான் உயிருக்கே போராட வேண்டிய நிலை இருந்ததாகவும் புகார் கூறியிருந்தார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ சோதனையில் ஹெச்1என்1 வைரஸ் (பன்றி காய்ச்சல்) இருப்பது தெரியவந்துள்ளது. அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஜெய்ஷாவுக்கு பின்னால் ஓடிவந்த கவிதா ராவுத் என்ற இந்திய சக மாரத்தான் வீராங்கனை, தனக்கு தண்ணீர் போதிய அளவு கிடைத்ததாகவும், ஜெய்ஷா ஏன் அப்படி கூறினார் என தெரியவில்லை எனவும் தெரிவித்திருந்தார். இந்திய தடகள சம்மேளனமும், வீராங்கனைகளுக்கு தண்ணீர, புத்துணர்ச்சி பானம் தரப்பட்டதாகவும், தேவைப்பட்டோர் பயன்படுத்தியதாகவும் கூறியிருந்தது. ஜெய்ஷா ஏன் இப்படி குற்றம் சொல்கிறார் என்பது புரியவில்லை எனவும் கூறியிருந்தது.
ஆனால், சமூக ஊடகங்கள், பொது ஊடகங்கள் என எல்லா தரப்பும், இந்திய ஒலிம்பிக் நிர்வாகத்தை கடுமையாக கண்டித்தும், விமர்சித்தும், கேலி செய்தும் கருத்து வெளியிட்டு வந்தன.
ஜெய்ஷாவுக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதியாகியுள்ள நிலையில், அவர் வைரஸ் பாதிப்பால்தான் தடுமாறியிருக்க வேண்டும் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. தனக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதை உணராமல், பலவீனமாக இருந்ததை மட்டும் வைத்துக்கொண்டு தண்ணீர் பிரச்சினையை அவர் கிளப்பியிருக்கலாம் என்று இந்திய ஒலிம்பிக் கமிட்டி அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.
பிரேசிலில் பன்றிக்காய்ச்சல், ஜிகா வைரஸ் போன்றவை அதிகமாக பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications