பீர் குடிக்கிற மாதிரி பிட் அடிக்கும் மாணவர்கள்-அதெல்லாம் தடுக்க முடியாது: பீகார் கல்வி அமைச்சர்
பாட்னா: பீகார் மாநிலத்தில் 10ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் தேர்வு எழுதிய போது அவர்களுக்கு பெற்றோரே போட்டி போட்டுக் கொண்டு பிட் கொடுத்த சம்பவம் நாடு முழுவதும் கடும் விமர்சனத்திற்குள்ளாகியிருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்த பீகார் கல்வி அமைச்சரோ, பிட் அடிப்பதையெல்லாம் தடுத்துவிட முடியாது என்று கூறி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
நாடுமுழுவதும் பல்வேறு மாநிலங்களில் அரசு பொதுத்தேர்வு துவங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் பீகாரில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்து கொண்டிருந்த போது பெற்றோர்கள், மாணவர்களின் உறவினர்கள் தேர்வு மையம் அருகே வந்தனர்.
மேற்கூரையில் உள்ள இடைவெளி வழியாக நுழைந்து தயாராக வைத்திருந்த பிட்டுகளை மாணவர்கள் நோக்கி போட்டனர். மாணவர்கள் அதனை எடுத்து காப்பி அடித்தனர்.
இந்த சம்பவம் லோக்கல் டி. வி., மீடியாக்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த லைவ் காட்சிகள் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கல்வியில் சிறந்த மாநிலம்
நாளந்தா பல்கலைக்கழகத்தை பெற்ற பெருமைமிக்க மாநிலம் பீகார். ஒரு காலத்தில் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தெல்லாம் வந்து இந்த பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கல்வி கற்றார்கள்.
அப்படி கல்வியில் சிறந்து விளங்கிய பீகார் மாநிலத்தில் கல்வியின் தரம் எப்படி இருக்கிறது என்பதற்கு, அங்கு தற்போது நடந்து வரும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு சிறந்த உதாரணம் ஆகும்.
பிட் பீகார்
பீகாரில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 17ஆம் தேதி தொடங்கியது. மாநிலம் முழுவதும் உள்ள 1,217 தேர்வு மையங்களில் 14 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதி வருகிறார்கள்.
பொதுவாக, தேர்வில் மாணவர்கள் பிட் அடிப்பது என்பது அங்கொன்றும், இங்கொன்றுமாக அபூர்வமாக நடைபெறும்.
இதெல்லாம் சாதாரணமப்பா
ஆனால் பீகார் மாநிலத்தில் தேர்வில் பிட் அடிப்பது என்று, ‘பீர்குடிப்பது‘ போன்ற சர்வ சாதாரணமான நிகழ்வு என்பது தற்போது நடைபெற்று வரும் தேர்வின் மூலம் அம்பலமாகி இருக்கிறது.
வைஷாலி மாவட்டத்தில் உள்ள பல மாடிகளை கொண்ட ஒரு தேர்வு மையத்தில் செவ்வாய்கிழமையன்று பரீட்சை நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அதை சுற்றிலும் ஏராளமான பேர் நின்று கொண்டிருந்தனர். மேலும் பல பேர் அந்த கட்டிடத்தின் மேல் ஏறி ஜன்னல் பகுதியில் நின்று கொண்டிருந்தனர்.
பெற்றோர் பிட் சப்ளை
அவர்களெல்லாம் உள்ளே அறையில் பரீட்சை எழுதிக்கொண்டிருக்கும் மாணவ-மாணவிகளின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் வேண்டப்பட்டவர்கள். உள்ளே பரீட்சை எழுதிக் கொண்டிருக்கும் தங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு, பிட் அடிப்பதற்காக ஜன்னல் வழியாக ‘புத்தகங்களையும், விடைகளையும் தூக்கிப் போட்டுக் கொண்டிருந்தார்கள். சிலர் புத்தகத்தின் சில பகுதிகளை அப்படியே கிழித்து கொடுத்தனர்.
மாணவர்கள் விறுவிறுப்பு
ஜன்னல் ஓரம் இருந்த மாணவர்கள் அவற்றை வாங்கிக்கொண்டு கருமமே கண்ணாக பார்த்து எழுதத் தொடங்கினார்கள். மேலே ஜன்னல்களில் ஏற முடியாதவர்கள், கீழே நின்றபடி ‘பிட்‘ காகிதங்களை சுருட்டி உள்ளே வீசினார்கள். இன்னும் சிலர் நீண்ட கம்பின் நுனியில் வைத்து ஜன்னல் வழியாக உள்ளே கொடுத்தார்கள்.
போலீஸ் பாதுகாப்பு வேறு
மொத்தத்தில் தேர்வு அறைகளில் இருந்த கிட்டத்தட்ட எல்லா மாணவர்களுமே ‘பிட்‘ தட்டுப்பாடு இன்றி பரீட்சையை பயம் இன்றி வெற்றிகரமாக எழுதினார்கள். இந்த அரிய காட்சியை, ரோட்டில் சென்று கொண்டிருந்தவர்கள், ‘பரீட்சையில் இதெல்லாம் சாதாரணமப்பா‘ என்பது போல் கண்டும் காணாமல் சென்றனர்.
ஊடகங்கள் அம்பலம்
ஆனால் அந்த வழியாக சென்ற பத்திரிகை புகைப்படக்காரர்கள் இந்த அபூர்வ காட்சியை படம் பிடித்து, பீகாரில் பள்ளிக்கூட தேர்வு எப்படி நடக்கிறது? என்பதை வெளியுலகுக்கு அம்பலப்படுத்தினார்கள். அதைப்பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
கல்வியமைச்சர் சமாளிப்பு
ஆனால் எங்கள் மாநிலத்தில் இதெல்லாம் சாதாரணம் என்பது போல பதிலளித்துள்ளார் பீகார் மாநில கல்வியமைச்சர் பி.கே.சாகி. மாணவர்கள், பெற்றோர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் பீகாரில் நேர்மையாக தேர்வை நடத்துவது என்பது முடியாத காரியம் என்றும், இது அரசுக்கு மிகவும் சவாலான பிரச்சினை என்றும் சாதாரணமாக கூறினார்.
அவங்க நிறுத்தட்டும்
ஒரு மாணவர் காப்பி அடிப்பதற்கு குறைந்தபட்சம் 4 அல்லது 5 பேர் உதவி செய்வதாக கூறிய அவர், இதை அரசாங்கத்தால் தடுத்து நிறுத்த முடியாது என்றும், இந்த விஷயத்தில் சமுதாயத்துக்கும் பொறுப்பு இருக்கிறது என்றும் கூறினார். அத்துடன், பரீட்சையில் பிட் அடிப்பது என்பது பீகார் மாநிலத்தில் மட்டும் நடக்கவில்லை என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டார்.
ஆயிரக்கணக்கனோர் சிக்கினர்
அதே நேரத்தில் நியாயமற்ற முறையில் பரீட்சை எழுதிய மாணவர்கள் நீக்கப்பட்டு இருப்பதாகவும், கணிதம், ஆங்கிலம் உள்ளிட்ட 3 பாட தேர்வுகளில் காப்பி அடித்ததாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பிடிபட்டதாகவும் பீகார் பள்ளி தேர்வு வாரிய தலைவர் லால்கேஷ்வர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கப்பா..












Click it and Unblock the Notifications