பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் ஓபிஎஸ்... அதிமுக இணைப்பு குறித்து ஆலோசனை?
அதிமுக இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் நரேந்திர மோடியை முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இன்று சந்தித்து பேசுகிறார்.
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக மும்பையிலிருந்து நேற்று மாலை டெல்லி சென்ற முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அதிமுக இணைப்பு குறித்து அவருடன் முக்கிய ஆலோசனைகளில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துணை ஜனாதிபதி பதவியேற்பு விழாவுக்காக டெல்லி சென்றிருந்தார் ஓ.பன்னீர் செல்வம். பின்னர் பிரதமர் மோடியைச் சந்திக்க முயற்சித்தார். ஆனால் பிரதமர் மோடி, நேரம் கொடுக்கவில்லை என்று தெரிகிறது.

இதனால் டெல்லியிலேயே காத்திருந்த ஓ.பன்னீர் செல்வம் கடந்த சனிக்கிழமை மும்பை சென்று அங்கிருந்து ஷீரடிக்கு சென்றார். அவருடன் எம்.பி. மைத்ரேயன், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் ஷீரடிக்கு சென்றனர்.
ஷீரடியில் சுவாமி தரிசனம் செய்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் நேற்று மாலை மும்பையிலிருந்து டெல்லி சென்றார். டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார்.
பிரதமரை சந்திக்க ஓபிஎஸ் முயற்சிப்பதை பார்க்கும் போது அதிமுக இணைப்புக்கான முடிவை எடுத்திருப்பார் என்றும் இன்று மோடியை சந்தித்தவுடன் ஏதேனும் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் தினகரன் நடத்தும் மேலூர் பொதுக் கூட்டத்திலும் ஏதேனும் முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications