சமாஜ்வாடி கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக அமர்சிங் நியமனம்
லக்னோ: சமாஜ்வாடி கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக அமர்சிங்கை நியமிப்பதாக முலாயம் சிங் அறிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் முலாயம்சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாடி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. சமாஜ்வாடி கட்சியின் தலைவரான முலாயம் சிங்கின் நெருங்கிய நண்பராக இருந்த அமர் சிங் கடந்த 2010-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

இதையடுத்து தனிக் கட்சி தொடங்கிய அமர் சிங், கடந்த 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு, அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவினார்.
அதன்பின்னர், ராஷ்டீரிய லோக் தளம் கட்சியில் இணைந்து 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தொடர்ந்து, முலாயம் சிங்கிற்கு, அமர் சிங்கிற்கும் இடையேயான கருத்து வேறுபாடுகள் நீங்கியதையடுத்து, மாநிலங்களவை உறுப்பினரானார் அம்ர்சிங்.
இந்த நிலையில், அவரை சமாஜ்வாடியின் தேசிய பொதுச் செயலாளராக நியமிப்பதாக முலாயம் சிங் அறிவித்தார். இது தொடர்பாக முலாயம் சிங் தனது கைப்பட அமர்சிங்கிற்கு எழுதிய கடிதத்தில் ''நீங்கள் சமாஜ்வாடியின் தேசிய பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்படுகிறீர்கள். உத்தரபிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில் கட்சியை நீங்கள் பலப்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்'' என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த கடிதத்தை மாநில சமாஜ்வாடி தலைவர் சிவ்பால் சிங் ஊடகங்களிடம் வெளியிட்டார். அமர்சிங், சிவ்பால் சிங்கின் தீவிர ஆதரவாளர் ஆவார். ஏற்கனவே சமாஜ்வாடியின் தேசிய செயலாளர்களாக பதவி வகித்து வரும் ராம்கோபால் யாதவ், உ.பி. அமைச்சர் முகமது அசம்கான் ஆகியோருடன் இணைந்து அமர்சிங் பணியாற்றுவார்.
சமாஜ்வாடியில் மீண்டும் இணைந்த அமர்சிங் குறித்து கட்சியில் வெளியாட்கள் தலையீடு இருந்தால் கட்சியை நடத்துவது சிரமம் என்று மறைமுகமாக சாடியிருந்தார் அகிலேஷ் .












Click it and Unblock the Notifications