அதிகரிக்கும் பதற்றம்: காஷ்மீரில் தாக்குதல் நடத்தப்படும் அபாயம் .. முக்கிய சுற்றுலா தலங்கள் மூடல்
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் புல்மேடு பகுதியில் கடந்த வாரத்தில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தச் செய்துள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய சுற்றுலா தலங்கள மூடப்பட்டுள்ளன.
மினி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் புல்மேடு பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் கொடூர தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். 12 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்த சம்பவம் இந்தியா முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பல்வேறு தடை நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. பாகிஸ்தானியர்கள் விசா ரத்து, சிந்து நதி ஒப்பந்தம் ரத்து, இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்றுவது, இருநாட்டு எல்லைகள் மூடல் என தொடர்ந்து இந்தியா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையே பாகிஸ்தான் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் இந்தியாவுக்கு எதிராக பேசி வருவது மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு பல்வேறு நாடுகளும் ஆதரவு தெரிவித்து இருக்கின்றன. பாகிஸ்தானின் முக்கிய நீராதாரமாக விளங்கும் சிந்து நதி நீரை நிறுத்தினால் அதனைப் போராகவே கருதுவோம் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.
இந்திய விமானப்படை, தரைப்படை, கப்பற்படை என முப்படைகளும் போருக்குத் தயார் நிலையில் உள்ளதாகவும், எப்போது வேண்டுமானாலும் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், இந்த கொடூர பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தானில் ஆயுத பயிற்சி பெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதி ஹாஷிம் மூசா மூளையாக செயல்பட்டது தெரியவந்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தானிடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இதைத்தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள தூஷ்பத்ரி, கோகர்நாக், டக்சம், சிந்தன் டாப், அச்சாபல், பங்கஸ் பள்ளத்தாக்கு, மார்கன் டாப் மற்றும் டோசமைதான் உள்ளிட்ட 48 முக்கிய சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 87 சுற்றுலா தலங்களில், 48 சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ உத்தரவு பிறக்கப்படவில்லை. இருப்பினும், இந்த இடங்களுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடும் பதற்றம் நிலவி வருவதால் வரும் நாட்களில் கூடுதலாக சில சுற்றுலா தலங்கள் மூடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications