பாகிஸ்தானுக்கு பதிலடி..கண்ட்ரோல் ரூமில் கூடிய டாப் தலைகள்! பரபரத்த மீட்டிங்..களத்தில் இறங்கும் என்ஐஏ
டெல்லி: காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீதான தீவிரவாதிகளின் தாக்குதல் உலகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா களமிறங்கவும் தயார் நிலையில் உள்ளது, இந்த நிலையில் தீவிரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரணையை தொடங்க இருக்கிறது மேலும் 'சர்ஜிகல்ஸ்' ஸ்ட்ரைக் போன்ற சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்கம் பகுதியில் கடந்த 22ஆம் தேதி சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. நான்கு பயங்கரவாதிகள் ராணுவ உடையில் வந்ததாகவும் மதத்தைக் கேட்டு கேட்டு ஒவ்வொருவரையும் சுட்டுக் கொன்றதாக தாக்குதலை நேரில் கண்ட ஒரு பெண் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கொடூர தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் பலியானதாக கூறப்படும் நிலையில் ஏராளமானோர் காயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதல் குறித்த தகவல் அறிந்தவுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினார்.

மேலும் பிரதமர் நரேந்திர மோடி தனது வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்துவிட்டு இந்தியா திரும்பினர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பாகிஸ்தான் தீவிரவாதி ஹபீஸ் சயத்தின் லஸ்கர்- இ-தொய்பா அமைப்பின் துணை அமைப்பான தி ரெசிடென்ஸ் ஃப்ரண்ட் பொறுப்பேற்று இருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் பாகிஸ்தான் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதை அடுத்து பாகிஸ்தான் உடனான பல்வேறு ஒப்பந்தங்களை இந்தியா ரத்து செய்துள்ளது.
குறிப்பாக சிந்து நதிநீரை அடைத்துள்ளது, பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு, வாகா எல்லை மூடப்படுவது என பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தொடர்ந்து இந்தியாவின் முப்படைகளும், எல்லை பாதுகாப்பு படை உள்ளிட்ட துணை ராணுவத்தினரும் தயார் நிலையில் இருக்கின்றனர். இன்று காலை எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இதற்கிடையே பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை விசாரணை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தலைநகர் டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் சார்பில் உள்நாட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, முப்படைகளின் உயர் அதிகாரிகள், இந்திய ராணுவத்தின் சிறப்பு படை அதிகாரிகள், உள்துறை செயலர் துறை, வெளியுறவுத் துறை செயலாளர் ஆகியோர் முக்கிய ஆலோசனை நடத்தினர்.
உள்துறை அமைச்சகத்தின் வடக்கு பிளாக் பகுதியில் முக்கிய விவகாரங்களை விவாதிக்கும் கண்ட்ரோல் ரூமில் இந்த சந்திப்பு நேற்று நடந்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் பஹல்காம் தாக்குதலில் புலனாய்வு தொடர்பாக ஜம்மு காஷ்மீர் போலீசுக்கு உதவும் வகையில் தேசிய புலனாய்வு முகமை அந்த விசாரணையை முழுமையாக எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அங்கு ஐஜி அந்தஸ்திலான ஒரு அதிகாரி என்.ஐ.ஏ. விசாரணை நடவடிக்கைகளை பார்வையிட்டு வருகிறார்
இந்நிலையில், பஹல்காம் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணையை முழுமையாக என்.ஐ.ஏ. ஏற்கும் உத்தரவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்னும் சில தினங்களில் பிறப்பிப்பார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் பஹல்காம் தாக்குதல் சம்பவ தொடர்பாக, மத்திய உள்துறைச் செயலா், ரா செயலா், மத்திய உளவுத் துறை இயக்குநா், ராணுவ சிறப்பு நடவடிக்கைகள் பிரிவு உயரதிகாரிகள், மத்திய ஆயுதப் படைகளின் உயரதிகாரிகள் ஆலோசனை நடத்திய நிலையில் சர்ஜிகல் ஸ்ட்ரைக் போன்ற சிறப்பு நடவடிக்கையும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications