பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் மீண்டும் துப்பாக்கி சூடு- ராணுவம் பதிலடி!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது.
இந்திய-பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி அவ்வப்போது இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்தியாவும் பதிலடி கொடுத்து வருகிறது.
அண்மைக்காலமாக எல்லையில் அமைதி நிலவிய நிலையில், இன்று அதிகாலை பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. காத்வா மாவட்டம் பான்சார் எல்லை சோதனை சாவடி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியது.
சிறியரக துப்பாக்கிகள் மற்றும் மோட்டார் பீரங்கிகளைக் கொண்டு பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் ராணுவத்துக்கு நமது ராணுவம் பதிலடி கொடுத்தது. அதிகாலை 1.30 மணிக்கு தொடங்கிய துப்பாக்கி சூடு 3.30 மணிவரையில் நீடித்தது.
கடந்த ஆகஸ்ட் மாதம் மற்றும் அக்டோபர் மாதங்களில் எல்லையில் இந்திய நிலைகள் மற்றும் கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்தியா தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டதையடுத்து பாகிஸ்தான் அடாவடியை நிறுத்திக் கொண்டது.
பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். சுமார் 32 ஆயிரம் கிராம மக்கள் கிராமங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.