காஷ்மீர் தீவிரவாதிகளுடன் இணைந்து அமைதியை சீர்குலைக்கும் பாக். ராணுவம்- இந்தியா கடும் கண்டனம்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் தீவிரவாதிகளுடன் இணைந்து செயல்படும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் மிகப் பெரிய தாக்குதலுக்கு தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக கூறி சுமார் 40,000 ராணுவ வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இந்திய விமானப் படையும் காஷ்மீரில் களமிறக்கப்பட்டுள்ளது.
இதனால் ஜம்மு காஷ்மீரில் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது. இந்த நிலையில் ராணுவத்தின் லெப்டினன் ஜெனரல் கேஜிஎஸ் திலோன், காஷ்மீர் டிஜிபி தீபக் சிங் இருவரும் ஸ்ரீநகரில் கூட்டாக இன்று அளித்த பேட்டி:
பயங்கரவாதிகளிடம் பாக் கண்ணிவெடிகள்
பயங்கரவாதிகளின் மறைவிடங்களில் இருந்து பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்தும் கண்ணிவெடிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. காஷ்மீரில் தீவிரவாத செயல்களில் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் தொடர்பிருக்கிறது என்பதை இது தெளிவாக காட்டுகிறது. இதை நாம் சகித்துக் கொண்டிருக்க முடியாது.
விரிவான ஆய்வு
அமர்நாத் யாத்திரை செல்லும் வழியில் பயங்கரவாதிகளின் இருப்பிடத்தில் இருந்து டெலஸ்கோப்புடன் கூடிய எம்-24 ரக அமெரிக்கா தயாரிப்பு துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் அதிகரிக்கும் பயங்கரவாதம் தொடர்பாக நாங்கள் விரிவாக ஆய்வு மேற்கொண்டிருக்கிறோம்.
உங்கள் குழந்தைகள்...
83% உள்ளூர்வாசிகள் ஆயுதங்களை கையில் வைத்துக் கொண்டு ராணுவத்தினர் மீது கல் எறிகின்றனர். ஜம்மு காஷ்மீரின் அனைத்து தாய்மார்களுக்கும் நாங்கள் முன்வைக்கும் வேண்டுகோள்... ரூ. 500க்காக உங்களது குழந்தைகள் இன்று ராணுவத்தினர் மீது கல் எறிகின்றனர்.. இதனாலேயே நாளை உங்கள் குழந்தையும் பயங்கரவாதியாகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அமர்நாத் யாத்திரையில் 3 லட்சம் பக்தர்கள் பங்கேற்றனர்.
எச்சரிக்கை
அமர்நாத் யாத்ரீகர்களுக்கு மிக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை நாங்கள் செய்து தந்துள்ளோம். அமர்நாத் யாத்ரீகர்களை குறிவைத்து தாக்குதல் நடத்த தீட்டப்பட்ட சதித்திட்டங்களை வெற்றிகரமாக நாங்கள் முறியடித்துவிட்டோம். ஜம்மு காஷ்மீரின் அமைதியை யார் சீர்குலைக்க நினைத்தாலும் அதை அனுமதிக்கமாட்டோம்.
|
முடிவுக்கு வந்த தீவிரவாத இயக்கங்கள்
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர்கள் ஒருசிலர்தான் உள்ளனர். அல்பாதர் இயக்கத்தின் கதை முடிந்துவிட்டது. ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பும் அழிக்கப்பட்டுவிட்டது. இவ்வாறு இருவரும் கூட்டாக பேட்டியளித்தனர்.