பாகிஸ்தானிடமிருந்து விடுதலை வேண்டும்... போராட்டத்தில் குதித்த பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரிகள்
டெல்லி: பாகிஸ்தானிடமிருந்து எங்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது பாகிஸ்தான் அரசுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
இந்தியாவின் ஒருங்கிணைந்த அங்கமான காஷ்மீரில் மனிதை மீறல்களில் இந்திய அரசு ஈடுபடுவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டி வருகிறது. ஆனால் அது ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீரிலேயே இந்தியாவுடன் சேர மக்கள் துடிக்கும் விஷயம் வெளியில் வந்துள்ளது.
இதன் மூலம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்கள் இந்தியாவை வெறுப்பதாகவும், இந்தியாவிடம் உள்ள காஷ்மீரும் தங்களுடன் சேருவதையே அவர்கள் விரும்புவதாகவும் கூறி வந்த பாகிஸ்தானின் புரட்டு அம்பலமாகியுள்ளது.
ஆயிரக்கணக்கில் மக்கள் போராட்டம்
செவ்வாய்க்கிழமையன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள காஷ்மீரிகள் பாகிஸ்தான் அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுத்து போராட்டத்தில் குதித்தனர். மேலும் இந்தியாவுக்கு ஆதரவாகவும் அவர்கள் கோஷம் எழுப்பினர்.
பல பகுதிகளிலும்
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ள கோல்டி, கில்ஜித், முசாபராபாத் உள்பட பல பகுதிகளிலும் மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியாவே மேல்
பாகிஸ்தானுடன் இருப்பதை விட இந்தியாவுடன் இணைந்திருப்பதே மேலானது, அதையே நாங்கள் விரும்புகிறோம் என்று பெரும்பாலான காஷ்மீரிகள் கோபத்துடன் கூறினர்.
சுதந்திரம் தேவை
எங்களுக்கு சுதந்திரம் தேவை. இங்கு மனித உரிமை மீறல்களில் பாகிஸ்தான் தொடர்ந்து ஈடுபடுகிறது என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர். சுதந்திரம் தேவை என்று பல காலமாகவே இங்குள்ள மக்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதையெல்லாம் பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வந்தது.
வளர்ச்சி இல்லை.. இளைஞர்கள் விரக்தி
இங்குள்ள இளைஞர்கள் மத்தியில் பெரும் விரக்தி காணப்படுகிறது. காரணம் வேலை இல்லை. உரிய சம்பளம் இல்லை. சுதந்திரமாக இருக்க முடியவில்லை. எந்த முன்னேற்றமும் இப்பகுதியில் இல்லை என்பதே காரணம்.
வீடியோ வெளியீடு
இந்தப் போராட்டம் தொடர்பான வீடியோ ஒன்றை சிஎன்என் ஐபிஎன் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. ஆனால் இது சித்தரிக்கப்பட்ட வீடியோ என்று பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது.