பிறந்த குழந்தைக்கு பாஸ்போர்ட் கிடைக்காதால் பாகிஸ்தான் செல்ல முடியாமல் பெற்றோர் தவிப்பு
ஜெய்ப்பூர்: தங்களுடைய பச்சிளம் குழந்தைக்கு பாஸ்போர்ட் கிடைக்காததால் பாகிஸ்தான் தம்பதியர் இந்தியாவில் தவித்து வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் பகுதியில் வாழ்ந்த தனது தந்தை மரணம் அடைந்த செய்தியை அறிந்த பாகிஸ்தானில் வசிக்கும் மாய் பாத்திமா என்ற பெண் தனது தாயை சந்தித்து ஆறுதல் கூற கடந்த பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி கணவருடன் ராஜஸ்தானுக்கு வந்தார்.
கர்ப்பிணியாக இருந்த அவருக்கு கடந்த 14 ஆம் தேதி ஜெய்சால்மர் நகரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையுடன் தார் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் பாகிஸ்தானுக்கு செல்ல முயன்ற போது அவர்களின் பாஸ்போர்ட்டில் குழந்தையின் பெயர் குறிப்பிடப்படாததால் இந்திய எல்லையை விட்டு அனுப்ப குடியுரிமை துறை அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
இதனையடுத்து ராஜஸ்தான் மாநிலத்தில் குழந்தை பிறந்ததற்கான அரசு சான்றிதழை பெற்ற மாய் பாத்திமாவின் கணவர் மீர் முகம்மது தங்கள் மகனுக்கு பாஸபோர்ட் கேட்டு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் உயர் தூதரகத்தை நாடியுள்ளார்.
அதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் எப்போது பாஸ்போர்ட் கிடைக்கும்? என்ற ஏக்கத்தில் 15 நாள் பச்சிளம் குழந்தையுடன் மாய் பாத்திமா கவலையுடன் தவித்துக் கொண்டிருக்கிறார்.