பாகிஸ்தானுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை இந்திய ராணுவம் ஏற்படுத்தும்: ஜெட்லி கடும் எச்சரிக்கை
டெல்லி: பாகிஸ்தான் தனது தாக்குதலை நிறுத்தாவிட்டால் அந்த நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை இந்திய ராணுவம் ஏற்படுத்தும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி கடுமையாக எச்சரித்துள்ளார்.
கடந்த 1ம் தேதி முதல் பாகிஸ்தான் ராணுவம் சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதிகளையொட்டிய இந்திய பகுதிகளில் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய ராணுவம் இதற்கு தகுந்த பதிலடி கொடுத்த போதிலும் பாகிஸ்தான் தனது தாக்குதலை நிறுத்திக் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது. தானியங்கி ஆயுதங்கள், சிறிய ரக மோட்டார் பீரங்கிகளால் தொடர்ந்து குண்டு மழை பொழிந்தது. நேற்று இரவும் ஜம்மு, கதுரா, சம்பா ஆகிய மாவட்டங்களில் சர்வதேச எல்லையில் நேற்று இரவு 80 கிராமங்கள், 60 இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்நிலையில் டெல்லியில் நிருபர்களுக்கு இன்று பாதுகாப்பு துறை அமைச்சர் அருண் ஜெட்லி அளித்த பேட்டி: பாகிஸ்தான் ஒரு பக்கம் தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கும்போது நம்மால் எப்படி அமைதி பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்க முடியும். இந்தியாவை தூண்டுவதை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டும். மீண்டும் இதுபோல தாக்குதல்களை பாகிஸ்தான் தொடர்ந்தால், பாகிஸ்தானுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை இந்திய ராணுவம் ஏற்படுத்தும்.
எல்லையில் இந்தியா அத்துமீறலில் ஈடுபடவில்லை, பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலில் இருந்து எல்லையில் இந்திய பகுதியில் வாழும் அப்பாவி பொதுமக்களை பாதுகாக்க எதிர் தாக்குதல் நடத்துகிறது. எல்லையில் அமைதியை விரும்பினால், பாகிஸ்தான் அத்துமீறலை நிறுத்த வேண்டும். இவ்வாறு அருண் ஜெட்லி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications