நாடாளுமன்ற தாக்குதல்: மைசூர் மனோரஞ்சன் வீட்டில் சேகுவேரா + விவேகானந்தர் புக்ஸ்- உளவுத்துறை குழப்பம்!
மைசூர்: நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதால் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான கர்நாடகாவின் மைசூர் மனோரஞ்சன் வீட்டில் உளவுத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனைகளில் சேகுவேரா மற்றும் விவேகானந்தர் புத்தகங்கள் சிக்கின. இதனால் மனோரஞ்சன் எந்த அமைப்பைச் சேர்ந்தவராக இருக்கக் கூடும் என உளவுத்துறையினர் குழப்பத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறி நுழைந்து புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சம்பவத்தில் இதுவரை மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் கர்நாடகா மாநிலம் மைசூர் விஜயநகரைச் சேர்ந்த 34 வயது இளைஞர் மனோரஞ்சனும் ஒருவர்.

இதனைத் தொடர்ந்து மைசூர் மனோரஞ்சன் வீட்டில் மத்திய உளவுத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். மனோரஞ்சனின் தந்தை தேவராஜ் கவுடா. தாயார் சைலஜா. 2014-ம் ஆண்டு பொறியியல் பட்டப் படிப்பை முடித்தவர் மனோரஞ்சன்.
மனோரஞ்சன் அறையில் பல்வேறு புத்தகங்கள் உள்ளிட்ட ஆவணங்களை உளவுத்துறையினர் கைப்பற்றினர். இதில் சேகுவேரா, விவேகானந்தர் புத்தகங்களும் இருந்தன. அத்துடன் பல்வேறு புரட்சியாளர்கள் குறித்த நூல்களும் மனோரஞ்சன் அறையில் சிக்கி இருக்கின்றன.

அத்துடன் மனோரஞ்சனின் பெற்றோரிடமும் உளவுத்துறையினர் விசாரணை நடத்தினர். இடதுசாரி சித்தாந்தத்தை முன்வைக்கும் சேகுவேரா, இந்து மத சீர்திருத்தவாதி விவேகானந்தர் என இருவேறு துருவ சித்தாந்தங்களின் புத்தகங்களை மனோரஞ்சன் வீட்டில் உளவுத்துறை கைப்பற்றினர். இதனிடையே தன் மகன் பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளர் எனவும் மனோரஞ்சன் தந்தை தேவராஜ் கவுடா கூறியிருப்பதால் மனோரஞ்சன் எந்த அமைப்பின் பின்னணியை கொண்டவர் என முடிவுக்கு வருவதில் உளவுத்துறையினர் குழப்பத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் மனோரஞ்சனின் சமூக வலைதளப் பக்கங்கள் குறித்து அவரது செல்போன் மூலம் ஆராயப்பட்டது. அதிலும் முழுமையான விவரங்கள் கிடைக்கவில்லையாம். கடந்த 3 மாதங்களாக தமது சோசியல் மீடியா பக்கங்கள் அனைத்தையுமே மனோரஞ்சன் டீ ஆக்டிவேட் செய்து வைத்துள்ளதாகவும் உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போதும் மனோரஞ்சன் வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அப்பகுதி முழுவதும் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications