மறைந்த சவுதி மன்னர் அப்துல்லா, ஆர்.கே.லட்சுமணனுக்கு நாடாளுமன்றத்தில் இரங்கல்
டெல்லி: நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல்நாளான நேற்று சவுதி மன்னர் மறைவுக்கும், மறைந்த கார்டூனிஸ்ட் ஆர்.கே.லட்சுமணனுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நாடாளுமன்றத்தில் முதல் நாள் கூட்டம் இரு சபைகளின் கூட்டு கூட்டமாக நடைபெற்றது. இதில் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்தினார்.
குடியரசுத்தலைவர் உரை நிகழ்த்தி முடித்ததும் இரு சபைகளும் தனித்தனியாக கூடின. குடியரசு துணைத்தலைவர் ஹமீது அன்சாரி தலைமையில் ராஜ்யசபா கூடியது.

அப்போது, சவூதி அரேபிய மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜிஸ் அல் சவுத் மறைவுக்கு அவையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதையடுத்து, சமீபத்தில் காலமான கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லட்சுமணன், உத்தராகண்ட் மாநில ராஜ்யசபா உறுப்பினர் மனோரமா டி.சர்மா, முன்னாள் உறுப்பினர்கள் எஸ்.கே.டி.ராமச்சந்திரன், கமலா சின்ஹா, ரமேஷ்வர் தாகுர், ஆனந்த் ராம் ஜெய்ஸ்வால், சரோஜினி மஹிஷி உள்ளிட்டோருக்கும் உறுப்பினர்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
லோக்சபாவில் அஞ்சலி
லோக்சபா கூடியதும், மேற்கு வங்காள மாநிலம் பங்கோன் தொகுதியில் இருந்து புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மம்தா தாகூர், உறுப்பினராக பதவி ஏற்றார்.
பின்னர், இந்த மாத தொடக்கத்தில் அசாமில் போடோ தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட 81 பேருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பேசினார். முன்னாள் எம்.பி.க்கள் ஜி.வெங்கடசாமி, மேஜர் ரஞ்சித் சிங், டாக்டர் சரோஜினி மகிஷி, டி.ராமாநாயுடு ஆகியோரின் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சி முடிந்ததும் சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications