போர் விமானம்: பாஜக பேஸ்புக் வெளியிட்ட தகவலை மறுத்த பாதுகாப்பு அமைச்சர்
மும்பை: பாஜக பேஸ்புக் வெளியிட்ட ஒரு தகவலை பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் மறுத்துள்ளார்.
36 ரஃபேல் போர் விமானங்களை மத்திய அரசு 8.8 பில்லியன் டாலர் விலையில் வாங்கியுள்ளதாகவும், இதன் மூலம், 3.2 பில்லியன் டாலர் சேமிக்கப்பட்டுள்ளதாகவும், பாஜக தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் தகவல் வெளியிட்டிருந்தது.

இருப்பினும் பாதுகாப்பு அமைச்சகம் பத்திரிகையாளர்களுக்கு அதுபோன்ற எந்த தகவலையும் தெரிவிக்காமல் இருந்தது. எனவே பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரிடம் நிருபர்கள் இதுகுறித்து கேட்டனர்.
அவர் கூறுகையில், ரஃபேல் வர்த்தகம் இன்னும் நிறைவடையவில்லை. முடியும் தருவாயில் உள்ளது. அமைச்சரவை ஒப்புதல், ஒப்பந்தத்தில் கையெழுத்து போன்ற செயல்பாடுகள் முடிவடையாதவரையில், ஒப்பந்தம் நிறைவடைந்ததாக கருத முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பாஜகவின் சோஷியல் மீடியா பொறுப்பாளர் அமித் மால்வாவிடம் நிருபர்கள் இதுபற்றி கேட்டபோது, ரஃபேல் டீல் முடிந்துவிட்டதாக ஊடகங்களில் வெளியான செய்தியை கொண்டுதான் பேஸ்புக்கில் போஸ்ட் போட்டோம். ஆனால், ஊடகங்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் பின்னர்தான் விளக்கம் தெரிவித்தது என்றார்.












Click it and Unblock the Notifications