கெட்ட வார்த்தையால் பாட்டியை காய்ச்சி எடுத்த கிளி.. கூண்டோடு தூக்கி வந்து விசாரித்த போலீஸ்!
சந்திராபூர்: புனேயில் 85 வயது பாட்டியினை கிளி ஒன்று ஓயாமல் திட்டியதாக வந்த புகாரினை அடுத்து போலீசார் அக்கிளியிடம் விசாரணை நடத்திய சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியது.
சந்திராபூர் மாவட்டம் ரஜூரா பகுதியை சேர்ந்த 85 வயது பாட்டி ஜனாபாய். இவரது வளர்ப்பு மகன் ஸ்டீபன் சுரேஷ். இருவரும் அருகருகே உள்ள வீடுகளில் வசித்து வருகின்றனர். ஸ்டீபன் சுரேஷ் செல்லமாக கிளி ஒன்றை வளர்த்து வருகிறார். அதற்கு "ஹரியால்" என்று பெயர். அந்த கிளிக்கு நன்கு பேச சொல்லி கொடுத்தார். அந்த கிளியும் அவர் சொல்லி கொடுத்ததை எல்லாம் சரளமாக பேசியது.
இந்த நிலையில், ஜனாபாய் அந்த பகுதியை கடந்து செல்லும் போதெல்லாம், கூண்டில் அடைப்பட்டிருந்த அந்த கிளி, அவரை கெட்ட, கெட்ட வார்த்தையால் திட்டியதாக தெரிகிறது. முதலில் இதை சாதாரணமாக எடுத்து கொண்ட ஜனாபாய் நாளடைவில் எரிச்சலடைந்தார். கிளியின் அருகில் சென்று கண்டித்தும் அது செவி சாய்ப்பதாக தெரியவில்லை. இதனால், வேறுவழியின்றி போலீஸ் நிலையம் சென்றார்.
{ventuno}
தன்னுடைய வளர்ப்பு மகன் ஸ்டீபன் சுரேசின் பயிற்சிக்கு இணங்க அவனுடைய செல்ல கிளி தன்னை அசிங்கம், அசிங்கமாக திட்டுவதாக கூறி போலீசில் புகார் செய்தார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் அதனை எந்த பிரிவின்கீழ் பதிவு செய்வது என குழம்பினார்கள். ஆனாலும், மனதை திடப்படுத்திக் கொண்ட அவர்கள் ஜனாபாய், ஸ்டீபன் சுரேஷ் ஆகியோரையும், குற்றம் சாட்டப்பட்ட கிளியையும் அழைத்து விசாரித்தனர்.
ஜனாபாயின் குற்றச்சாட்டு உண்மை தானா என்பதை ஆராய கிளியை அவர் அருகில் நிற்க வைத்து அதை பேச வைக்க முயற்சித்தனர். ஆனாலும், அந்த கிளி போலீசாரின் காக்கிச்சட்டையை பார்த்ததும் உஷாரானது. ஏதாவது பேசினால், விபரீதம் ஆகிவிடும் என்பதை உணர்ந்த அந்தக் கிளி ஒரு வார்த்தை கூட வாயை திறந்து பேசவில்லை. இதனால், குழப்பத்தின் உச்சத்துக்கே சென்ற போலீசார் அவர்கள் 3 பேரையும் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ஏற்கனவே ஜனாபாயிக்கும், அவருடைய வளர்ப்பு மகனுக்கும் இடையே நிலத்தகராறு இருப்பதாகவும், இதை காரணம் காட்டி அவர் வேண்டுமென்றே இந்த புகாரை தாக்கல் செய்திருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர். அதேசமயம் சர்ச்சையை ஏற்படுத்திய கிளியை வனத்துறையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications