சென்னை-குண்டூர் ரயிலில் திடீர் தீ: பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
நெல்லூர்: சென்னை- குண்டூர் பயணிகள் ரயிலின் பெட்டி ஒன்று ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் தீப்பிடித்து எரிந்தது. பயணிகள் உடனே கீழே இறங்கியதால் யாரும் காயம் அடையவில்லை.
சென்னையில் இருந்து குண்டூர் செல்லும் பயணிகள் ரயில் திங்கட்கிழமை மாலை 5.52 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பியது. ரயில் நேற்று மாலை 7.20 மணி அளவில் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் எண் ஒன்றை அடைந்தது. அப்போது ரயிலின் இரண்டாவது பெட்டி திடீர் என தீப்பிடித்து எரிந்தது.

மின் கசிவால் அந்த பெட்டியில் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. பெட்டி தீப்பிடித்ததை பார்த்த பயணிகள் உடனே அதில் இருந்து கீழே இறங்கிவிட்டனர். இதனால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். உடனே அதிகாரிகள் ஓடிவந்து தீப்பிடித்த பெட்டியை ரயிலில் இருந்து துண்டித்துவிட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விபத்தில் நல்லவேளையாக பயணிகள் யாரும் காயம் அடையவில்லை என்று நெல்லூர் ரயில்வே போலீஸ் அதிகாரி ரமேஷ் பாபு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications