ஹே.. தள்ளு தள்ளு தள்ளு... ஓடாத ரயில்.. பயணிகளை தள்ள வைத்த ‘புத்திசாலி’ டிரைவர்!
மதுரா: மதுராவில் கோளாறு காரணமாக பாதி வழியில் நின்ற ரயில் பஸ்ஸை பயணிகள் சேர்ந்து தள்ளிச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.
கார், பஸ் போன்றவற்றில் செல்ப் ஸ்டார்ட்டர் வேலை செய்யாத போது அவற்றைத் தள்ளி ஸ்டார்ட் செய்வது வழக்கம். ஆனால், இந்த டெக்னிக்கைப் பயன்படுத்தி ரயில் பஸ்ஸை ஸ்டார்ட் செய்ய முயற்சித்துள்ளார் டிரைவர் ஒருவர்.

இந்த சம்பவம் நடந்தது மதுராவில். வடக்கு மத்திய ரயில்வே, மதுரா - பிருந்தாவன் இடையிலான, 12 கி.மீ., துாரத்திற்கு ரயில் பஸ் ஒன்றை இயக்கி வருகிறது. இரண்டு பெட்டிகள் மட்டுமே கொண்ட 'மீட்டர் கேஜ்' ரயிலான இது அடிக்கடி பாதி வழியில் ரிப்பேராகி நின்று விடுமாம்.
அந்த வகையில் மசானி அருகே சென்ரு கொண்டிருந்த போது சில தினங்களுக்கு முன்னர் இந்த ரயில் பஸ் திடீரென நின்று விட்டது. டிரைவர் எவ்வளவோ முயற்சித்தும் ரயில் மீண்டும் ஸ்டார்ட் ஆகவில்லை. உடனே, டிரைவருக்கு ஒரு யோசனை உதித்துள்ளது.
ரயில் பஸ்ஸில் இருந்த அனைத்து பயணிகளையும் கீழே இறங்கச் சொல்லி, அவர்களை ரயிலை தள்ளச் சொல்லி இருக்கிறார். வேறு வழி இல்லாமல் பயணிகளும், முணுமுணுத்தவாறே ரயிலை தள்ளி உள்ளனர். சில கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேலாக தள்ளியும், ரயில் என்ஜின் ஸ்டார்ட் ஆகவில்லை.
இந்த விவகாரம் குறித்து ஆக்ரா ரயில்வே கோட்ட மக்கள் தொடர்பாளர் பூபேந்தர் தில்லான் கூறுகையில், "ரயில் பஸ் என்பதால், அதுவும் பஸ் போல் தள்ளினால் ஸ்டார்ட் ஆகும் என்று டிரைவர் நினைத்து, பயணிகளை தள்ளச் சொல்லியிருக்கலாம்'' என விளக்கமளித்துள்ளார்.
ஆனால், அடிக்கடி ரயில் பஸ் ரிப்பேராகி விடுவதால், அதன் டிரைவர்கள் பயணிகளிடம் திட்டு வாங்குவது வழக்கமாக நடைபெறுமாம். எனவே, அதற்குப் பழி வாங்கும் நடவடிக்கையாகத் தான் இவ்வாறு பயணிகளை ரயிலை தள்ள வைத்துள்ளார் டிரைவர் என பயணிகள் புலம்புகின்றனர்.












Click it and Unblock the Notifications